பக்கம்:கடவுள் பாட்டு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48



போற்றி உன்னை வழிபட்டுப்
பொன்றா நிலையை யெய்திடவே
ஆற்றி இருந்தேன் எம்பெருமான்
அதுவே எனக்கு நீயருள் வாய். 143

அன்பே அன்பே உயிரன்பே
அறிவே அறிவே நல்லறிவே
இன்பம் இன்பம் பேரின்பம்
எய்த உன்னைக் கூடினனே.
முன்போ பின்போ உனையறியேன்
முற்றும் உன்னை யறிந்ததன்பின்
முன்பும் பின்பும் அறியாத
முடிவில் இன்பம் பெற்றேனே. 144

காணும் பொருளில் மயலாகிக்
கனவும் நினைவும் அதுவேயாய்த்
தோணும்ப டிக்கே எண்ணத்தைத்
தொடர விட்டோர் உள்ளத்தை
வீணென் றெண்ணி விட்டாயோ
வீடென் றெண்ண மறந்தாயோ
காணென் உள்ளம் உன்வீடாய்க்
காட்சி யளிக்கும் பெருமானே. 145

கேட்கும் பேச்சில் மயலாகிக்
கீழாம் அந்தப் பேச்சினையே
வேட்கும் எண்ணம் உடையாராய்
விரையும் மாந்தர் உள்ளத்தை
ஆட்கொள் கின்ற எண்ணமுனக்
கற்றுப் போச்சோ பெருமானே.
நாட்கள் தோறும் உன்னடியை
நாடும்; பேச்சே நான்கேட்பேன். 146

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/50&oldid=1212487" இலிருந்து மீள்விக்கப்பட்டது