பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


நாத்திகனாம் ; நல்லிளைஞர் பிஞ்சு நெஞ்சை
நஞ்சாக்கி விட்டேனாம் ; அவருள்ளத்தில்
காத்திருந்து கன்னக்கோல் வைக்கின் றேனாம் ;
கதைக்கின்றார். நானென்ன கன்னிப் பெண்ணா?
பாத்தியிலே தலைநீட்டும் களைகள், நல்ல
பயிர்ச்செடியை அழிப்பதற்கு நிற்பதைப்போல்
காத்திருக்கின் றார் என்னை அழிப்ப தற்கு.
கட்டாரி நீட்டுகின்றார் முதுகுப்பக்கம்!

செருப்பெனக்கு வெறுங்கால்கள் ; வானக் கூரை
சிந்துகின்ற பனிவியர்வை எனக்குப் போர்வை.
சுருக்கத்தை என் வயிறு பெற்ற தன்றிச்
சுவையுணவைப் பெற்றதில்லை; பசியால் மேனி
உருக்குலைந்த காலத்தும் பிறர்க்குத் தீமை
உள்ளத்தால் நினைத்ததில்லை; பணத்தைத்தேடித்
தெருத்தெருவாய் அலைந்ததில்லை; எனது நேர்மைத்
திறத்துக்கு வறுமையொன்றே சான்று போதும்.

வில்லாற்றல் வீரனுக்கு வெற்றி ; பெண்டிர்
விழியாற்றல் காதலுக்கு வெற்றி ; தேனைச்
சொல்லாக்கித் தருகின்ற புலவனுக்குச்
சுவையாற்றல் தான்கவிதை வெற்றி; வெல்லும்
சொல்லாற்றல் பெற்றிருக்கும் எனக்கு முன்னால்
சுள்ளியைப்போல் ஒடிந்தவர்கள் ஒன்றாய்க் கூடி
மல்லுக்கு நிற்கின்றார் : சேற்றில் யானை
மடிகிறது ! மாய்க்கிறது நரியின் கூட்டம் !