பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52



நெருப்பினை ஈக்கள் மொய்க்க
நெருங்குமா ? யானைக் கொம்பை
அரிக்குமா கறையான் ? தங்க
ஆசனத் திருக்கும் முத்தில்
துருப்பிடிப் பதுவு முண்டா ?
தோகையென் கற்பு நெஞ்சம்
அரக்குமா ளிகையென் றெண்ணி
அகலாதீர் ; நெருப்புக் கோட்டை !


வயிரத்தைத் தேய்க்கும் மற்றோர்
வயிரமே ! சிந்திக் காமல்
உயிருக்குச் சுருக்கு வைத்தே
ஒடுதல் நன்றா ? என்றன்
உயரத்தை நான்பி றந்த
உளைச்சேற்றால் அளக்க வேண்டாம் ;
வயிரத்தின் தரத்தைப் பார்க்க
வாயினால் கடிப்பா ருண்டா ?


பூனையின் எச்ச மென்றே
புனுகினை வெறுக்க லாமா ?
கானவாய்க் குழலைக் காட்டுக்
கழையென்று வீச லாமா ?
தேனுந்தான் ஈயின் எச்சில்!
தேவரீர் இந்தப் புள்ளி
மானையும் நடிக்கும் ஆடல்
மகளென்று தள்ள லாமா ?