பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இப்படிப் பல சான்றுகளைக் காட்டிச் செல்லலாம். ஆயினும், பரக்குமென இத்துடன் தருக்கப் பட்டது. ஆகவே, திருத்தக்க தேவரது சிறப்புக் குன்றின்மேல் இட்ட தீபம் போல என்றும் குறையா ஒளியுடையதாகும்.

இது காறும் கூறப்பட்ட பெருமை வாய்ந்த புலவர் திலகராற்பாடப்பட்ட நூலே சீவக சிந்தாமணி என்பது. இதனைத் தமிழ் அறிவு படைத்த எவரும் அறிவர். இந்நூல் எல்லாப்படியாலும் ஈடும் எடுப்பு அற்ற ஒரு தனி நூல். தன்மையால் பெயர் பெற்ற நூல் இன்ன என்பதை மயிலை நாதர் குறிப்பிடுகையில், 'சிந்தாமணி, சூளாமணி, நன்னூல்' என்று கூறுவதால் நன்கு விளங்கும். இந்நூளை எச்சமயத்தவரும் எப்புலவரும் பாராட்டாமல் இரார். இதற்குரிய காரணம், இந்நூற்கண் அமைந்த பொருட் சிறப்பே அன்றி, வேறு அன்று. சிவப் பிரகாச சுவாமிகள் இந்நூற் பொருளை நன்கு துய்த்து அறிந்தவர் என்பது, அவர் யாத்த திருவெங்கைக் கோவையில் காணப்படும் ஒரு செய்யுளினின்றும் நன்கு புலனாகிறது.

"சிந்தா மணியும் திருக்கோ வையும் எழு திக்கொளினும்
கந்தா உரையை எழுதல் எவ் வாறு நவின்றருளே !'

'என்பன அப்பாடலின் அடிகளாகும். இதனால், சிந்தாமணியின் உரைப் பொருளைக் கற்பனைக்கு ஊற்றாம் துறைமங்கலம் சிவப்பிரகாசரே, இங்ஙனம் இந்நூலின் நுட்பத்தினைத் தெரிவிப்பாராயின், மற்றப் புலவர் எத்துணை அளவிற்கு இதனைப் பாராட்டுவர் என்பதை உணந்து மகிழ்வோமாக !

இன்னோரன்ன இயல்பு வாய்ந்த நூலிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை ஆராயவேண்டிய உள்ளம், திருத்தக்க தேவர் கண்ட நாடாகிய ஏமாங்கத நாட்டின் மீது சென்றது. இதன்மீது கருத்துச் சென்ற