8
கண் திறக்குமா?
அல்லது, பிறருடைய உதவியை எந்த நிலையிலும் எந்த விதத்திலும் நாட விருப்பமில்லாதவர்களாயிருப்பார்கள்.
இவர்களுடைய சபலம் என்ன தெரியுமா? - பொது ஜனங்களே வலுவில் வந்து, தங்களுடைய தன்னலத் தியாகத்தையும் சேவா உணர்ச்சியையும் போற்றிப் புகழ்ந்து, தங்களுக்கு வேண்டிய அன்பையும் ஆதரவையும் அளிப்பார்கள் என்பதுதான்! - அதாவது, ‘சத்தியம் ஜெயிக்கும்’ என்பது இவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த உலகத்தில் தற்சமயம் இல்லாத ஒன்றை நம்பி, இருக்க இடமும், உடுக்க உடையும் தின்ன உணவும் இன்றிப் பிறர் உயர நிற்கும் ஏணிகளாய், ஏகாங்கிகளாய், சமூகத்தில் நடைப் பிணங்களாய்த் திகழ்பவர்கள் இவர்கள்!
பொதுவாகத் தனக்கு உதவி செய்யக்கூடியவர்களிடம் என்னதான் குற்றங்குறைகள் கண்டாலும் மனிதன் கூடியவரை அவற்றை மூடிவைக்கவே முயற்சி செய்கிறான். இவ்வாறு செய்வது, தன் சொந்தத் தேவைகளை அவன் பூர்த்தி செய்து கொள்வதற்கு அத்தியாவசியமாக இருக்கிறது. தன்னலகத்துக்காக மனிதன் சாகும் வரை மேற்கூறிய முறையைக் கைக்கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் செத்தும் தொலைந்துவிடுகிறான்! - இதனால் எத்தனையோ உண்மைகளை உலகம் கடைசிவரை அறிய முடியாமலே போய்விடுகிறது. ஏய்க்கும் கூட்டம் என்றைக்கும் தன் இஷ்டம்போல் ஏய்த்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கும், ஏமாந்த கூட்டம் எப்பொழுதும் ஏமாந்து மடிந்து கொண்டிருப்பதற்கும் ஏதுவாகி விடுகிறது. தப்பித்தவறி இதைப்பற்றி யாராவது ஒருவன் துணிந்து பேசவோ, எழுதவோ ஆரம்பித்துவிட்டால் போதும்; உடனே ஒரு சிலரால் பெரியோர்களாக்கப்பட்ட பெரியோர்கள், அவனைப் பெருந்தன்மையில்லாதவன் என்றும், தமிழர் பண்பை அறியாதவன் என்றும், மிகமிக