142
கண் திறக்குமா?
பரந்தாமனார், “என்னால் உனக்கு இன்று ஐந்து ரூபாய் நஷ்டம்; அப்படித்தானே?” என்றார் வழக்கம்போல்.
“அது எப்படி நஷ்டமாகும்? தெருவிலா வீசி எறிந்து விட்டேன்?” என்றேன், நானும் ஏறி அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே.
“சந்தேகமென்ன, தெருவில் வீசி எறிந்த மாதிரி தான்! அதனால் உனக்கு ஏதாவது லாபம் உண்டா?”
“ஐயா! எதைச் செய்தாலும் நீங்கள் லாபத்தோடு செய்துகொண்டு போங்கள்; எனக்கு லாபமும் வேண்டாம்; நஷ்டமும் வேண்டாம் - மனிதனாக மதித்து இரங்கும் மனம் இருந்தால் போதும்!” என்றேன் நான்.
“ம், நான் சொன்னால் நீ கேட்கவா போகிறாய்? சொல்பவர்கள் சொன்னால் அவசியம் கேட்பாய்!” என்றார் அவர் பெருமூச்சு விட்டுக்கொண்டே.
“ஒரு நாளுமில்லை. யார் என்ன சொன்னாலும் சரி, எனக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் எடுத்துக் கொள்வேன்!” என்றேன் நான்.
“உண்மையாகவா!”
“ஆமாம்.”
“எங்கே, இன்னொரு முறை சொல், பார்ப்போம்?”
“எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன் - எனக்கு எது சரி என்று படுகிறதோ, அதைத்தான் எடுத்துக் கொள்வேன்!”
அவர் சிரித்துவிட்டு, “சாந்தினி சொன்னால் கூடவா கேட்கமாட்டாய்!” என்றார் விஷமத்தனத்துடன்.
ஒரு கணம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை; மறு கணம் என்னை நானே ஒருவாறு சமாளித்துக்கொண்டு,