விந்தன்
160
"உண்மை; அவளும் உன்னைப்போல் அவனுக்குப் பயந்து ஓடி வராமல் இருந்தாளே, அதைச் சொல்!" என்றேன் நான்.
அவள் சிரித்தாள், "ஏன் சிரிக்கிறாய், சித்ரா?" என்று கேட்டேன் நான்.
"ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தை அண்ணா திருப்பிக் காட்டும் போது தங்கை என்ன செய்வாள்?" என்றாள் அவள்.
"இல்லை: உன் அண்ணனுக்கு அந்த விஷயத்தில் மட்டும் நம்பிக்கை இல்லவே இல்லை!"
"இருக்கலாம்; ஆனால் செங்கமலத்தின் விஷயத்தில் நீதி வழங்க உங்களால் முடியவில்லையே?"
"அதற்கு நீதான் குறுக்கே இருந்தாய்; அதனால் தான் அந்தப் பொறுப்பை நான் பாலுவிடம் விட்டு விட்டேன்!"
இந்தச் சமயத்தில் அங்கு வந்த செங்கமலம் ஒன்றும் புரியாமல் எங்களைப் பார்த்தாள். "விஷயம் வேறொன்று மில்லை; நீயும் நானும் செய்ய வேண்டிய காரியத்தை இன்னொருத்தி செய்துவிட்டாள்!" என்றாள் சித்ரா!
"ஆமாம். இதுவரை நாகரிகம் ஒழுக்கத்தைக் கொன்று வந்தது; இப்போது ஒழுக்கம் நாகரிகத்தைக் கொன்று விட்டது!" என்றேன் நான்.
"எந்த ஒழுக்கம் எந்த நாகரிகத்தைக் கொன்று விட்டது?" என்றாள் செங்கமலம் ஒன்றும் புரியாமல்.
பத்திரிகையில் வந்திருந்த செய்தியை நான் அவளுக்குக் காட்டினேன். அதன் பலன், மறுநாள் காலை எங்கள் வீட்டுக் கொல்லைக் கிணற்றில் அவளுடைய உயிரற்ற உடலைத்தான் எங்களால் பார்க்க முடிந்தது!