பக்கம்:கதாநாயகி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம் * 5


ஏன் இந்த நிலை அவளுக்கு ஏற்பட்டது? வேடத்தை புனை வடிவத்தை மாற்றிக் கொள்ள மறந்துவிட்டாளா, என்ன?

“ஐயா... ”

அம்பலத்தரசன் அவளை ஏறிட்டு நோக்கினார்.

குமாரி ஊர்வசி ஆத்திரம் பொங்கிப் புரள நின்றாள். பட்டுக் கன்னங்கள் கன்றியிருந்தன. அங்கங்கே நகக்கீறல்கள் சில தட்டுப்பட்டன. வேடம் புனைய உதவிய அரிதாரத் தூள் காதோரங்களில் இன்னமும் திட்டுத் திட்டாகத் தெரிந்தது.

“என்னம்மா?” என்று பரிவுடன் விசாரித்தான் அவன்.

“ஐயா!... நாடகக் கதையிலே, பொய்யாக ஒருவன் ஒரு வில்லன் என்னைக் கற்பழிச்சான்! இப்போது நிஜமாகவே ஒருவன் என்னைக் கெடுத்திட்டானுங்க ஐயா!....”

அவள் கையிலிருந்த அழகான டைரி ஒன்று கை நழுவியது.

அம்பலத்தரசன் மெய் விதிர்த்து நின்றான். “ஐயையோ! அப்படியா!...” என்று பதட்டத்தோடு கேட்டான். அவன் குரலில் கட்டுக் கடங்காத கவலையும், ஆத்திரமும் இருந்தன. கேட்டுவிட்டு, மீண்டும் அவளுடைய முகத்தைப் பார்த்தான் அவன். இமைகள் துடித்தன.

பால் வழிந்த நிலவில் குளித்த அந்தப் பால் வழியும் வதனத்தில் இப்போது வைராக்கியத்தின் சுடர் ஒளிகாட்டித் திகழ்ந்த அடிபட்ட பெண்மானின் வேதனையையும் அவள் முகம் மறைத்துவிட முடியவில்லை. எழில் செழித்த அவளது மார்பகம் எம்பி எம்பித் தாழ்ந்தது.

“உங்கள் அறையென்று தெரிந்துதான் தப்பியோடி வந்தேன்... ஆமாம், என்னுடைய மானத்தைப் பறிகொடுத்திட்டு, உயிருக்குப் பயந்துதான் இப்போது ஓடோடி வந்திருக்கேன்..”. என்று செருமினாள் ஊர்வசி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/15&oldid=1320975" இலிருந்து மீள்விக்கப்பட்டது