பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

இருந்த மலை நம் கண்ணில் படவில்லையே! எனப் பெரிதும் வியப்பு எய்தினான். இருட்டு அவன் கண்ணில் எந்தப் பொருளும் படாதபடி செய்துவிட்டது. எல்லாப் பொருளும் ஒரே கறுப்பாகத் தான் அவனுக்குத் தோன்றியது. சிறிய பொருளாக இருந்தாலும் சரி, பெரிய பொருளாக இருந்தாலும் சரி அதனை மறைப்பது இருட்டு.

ஒளி வந்தபின் அவன் மலையைப் பார்க்கிறான்; மடுவைப் பார்க்கிறான்; எழில் மிக்க மலரைப் பார்க்கிறான். 'அடடா! இவை யாவும் நம் கண்ணில் படாதவாறு இருந்தது என்னே!' என்று வியப்பு எய்துகிறான்.

மேல் நாட்டில் ஆர்க்கிமிடீஸ் என்ற விஞ்ஞானி ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தபோது, கத்திக் கொண்டு குதித்தானாம். ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் வியப்பு உண்டாகும். இந்த மனிதனும் வியப்பில் மூழ்கினான். அவன் கண்டுபிடித்தது சாமானியமான பொருளா? மிக உயர்ந்து நிற்கும் மலை. அந்த இடத்தில் திடீரென்று மலை முளைத்ததா? இல்லை. முன்பே இருந்த அந்தப் பெரிய மலையை, இருட்டுச் சூழ்ந்து கொண் டிருந்ததால், அவன் பார்க்கவில்லை. ஒளி தோன்றியவுடனேயே அந்த மலை அவன் அதிசயிக்கும்படியாக அவன் கண்ணில் தோன்றியது. புதியதாக அங்கே வந்து நின்றது போல இருந்தது அவனுக்கு. உடனே அதன் மேலே ஏற வேண்டு மென்று விரும்பினான். இருட்டிலே நேராக இருக்கின்ற பாதைகூடத் தெரியாது; சிறிய ஒளியின் துணை இருந்தால் நேரான பாதை தெரியும். ஆனால் கரடு முரடாக இருக்கிற ஒற்றை அடிப்பாதை தெரியாது. நல்ல ஒளி இருந்தால் என்ன கவலை? நேராக இல்லாத பாதையாக இருந்தாலும், காலை தூக்கி வைத்து ஏறுகின்ற செங்குத்துப் பாதையாக இருந்தாலும் நன்றாகத் தெரியும். ஆகவே, அவன் நல்ல ஒளியின் உதவியைக் கொண்டு மலை மேலே மெல்ல மெல்ல ஏறிப் போனான். மலை ஏற ஏற அவன் இருக்குமிடம் பூமி மட்டத்திலிருந்து உயர்ந்து கொண்டே போயிற்று.

பார்வை விரிதல்

நிலத்தில் இருக்கும்பொழுது குறுகிய இடமே அவன்கண்ணில் பட்டது. வீட்டுக்குள் இருந்தால் அந்த வீட்டுக்குள் இருக்கும் பொருள்கள் மட்டுமே தோன்றும்; வீதி தெரியாது; வீதியில்

248