தாழ்வு இல்லை ஏதேனும் ஒரு பொருளிடத்தில் அன்பு இருந்தால் அந்தப் பொருளைப் பற்றிய இயல்புகளை அடிக்கடி சொல்லவேண்டும் என்று தோன்றும். இறைவன்பால் அன்பும், அவனை நினைக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால் அவன் நாமங்களையும், இயல்புகளையும் பலபடியாகச் சொல்லி இன்புறும் இயல்பு உண்டாகும். பலபடியாகச் சொன்னால் கொஞ்சம் உள்ளத்தில் உருக்கமும் தட்டும். அதனால் ஆண்டவனுக்குரிய இயல்புகளை இந்தப் பாட்டில் வரிசையாக அருணகிரியார் சொல்கிறார். அப்படிச் சொல்வதனால் அவருக்கு இன்பம் உண்டாகின்றது. நாமும் இறைவனை நினைத்துப் பார்க்கும்படி செய்கிறார். அவர் முருகப் பெருமானை எந்த எந்த வகையில் அடையாளம் காட்டுகிறார் என்பதை இனிப் பார்க்கலாம். சேந்தன் முதலில், சேந்தனை என்று சொல்கிறார். சேந்தன் - சிவந்த நிறம் உடையவன். முருகப் பெருமான் செக்கச்சேவல் என்ற திருமேனி உடையவன், 'குங்கும ரத்த வர்ணம் உடையவன்' என்பது தியான சுலோகம். காலையில் உதிக்கும் கதிரவன் சிவந்த நிறத்தோடு தோற்றுவான். முருகனும் அந்த இளஞாயிறு போல் விளங்குவான். “உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி' என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையின் ஆரம்பத்தில் சொல்வார். "செய்யன் சிவந்த ஆடையன்' என்று பாடுவார். குறுந்தொகையில் உள்ள கடவுள் வாழ்த்து, "பவழத் தன்ன மேனி" என்று முருகனுடைய திருமேனிக்கு உவமை கூறும். "செங்கோட்டுப் பிள்ளை சிவந்த பிள்ளை' என்பது ஒரு தனிப்பாட்டு. நம்முடைய தமிழ்நாட்டில் ஒருவனை அழகுடையவன் என்று குறிப்பிட வேண்டுமானால் முதலில் 187
பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/195
Appearance