பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தெள்ளிக் கொழிக்கும் கடல்செந்தில் மேவிய சேவகனே! வள்ளிக்கு வாய்த்தவ னே!மயில் ஏறிய மாணிக்கமே! இருதலைக் கொள்ளிக்கு நடுவான இடத்தில் அகப்பட்ட எறும்பைப் போல இன்ன நெறியில் செல்வது என்று தெரியாமல் மனம் குலையும் அடியேனுடைய உள்ளத்திலுள்ள துயரத்தை நீக்கி நின் திருவருளை வழங்க வேண்டும்; ஒரு கோடி முத்துக்களை அலைகள் எடுத்து வந்து குவிக்கும் கடலின் கரையில் உள்ள திருச்செந்தூரில் விரும்பித் தங்கும் பெருவீரனே வள்ளிக்கு உரிய காதலனாக வாய்த்த பெருமானே! மயிலின்மேல் ஏறிப் பவனி வரும் ஒளியும் சிவப்பும் உள்ள மாணிக்கம் போன்றவனே! கொள்ளித் தலையில் என்பது இருதலைக் கொள்ளியிடையே என்ற பொருளைக் குறிப்பால் புலப்படுத்தியது. எறும்பது; அது, பகுதிப் பொருள் விகுதி. குலையும் என்பது என் என்பதனோடும் சேரும்; உள்ளம் என்பதனோடும் சேரும். ஒரு கோடி என்பது அளவில்லாததைச் சுட்ட வந்த வாய்ப்பாடு. தெள்ளி - தெளிவாக எடுத்து. கொழிக்கும் - கொண்டு வந்து குவிக்கும். சேவகம் - வீரம். வள்ளிக்குத் தவப்பயனால் கிடைத்த வன், மற்றவருக்குக் கிடைப்பதற்கரியவன் என்பதை 'வாய்த்தவன் என்பது குறிக்கிறது. வள்ளிக்கு அதிருஷ்டம் அடித்தது என்று சொல்வது போலச் சொல்கிறார். மாணிக்கம் நவரத்தினங்களில் தலைமையானது. இயல்பான ஒளியை உடையது. திண்மையானது. சிவப்பானது. பல அணிகளினிடையே கலந்து நின்றாலும் தனிச் சிறப்புடன் விளங்குவது. எப்போதும் விலை மதிப்புக் குறையாமல் இருப்பது. மன்னரின் முடிமேல் சிறந்து நிற்பது. குப்பையில் கிடந்தாலும் மதிப்புக் குன்றாதது. இத்தனை இயல்புகளையும் முருகனோடு சார்த்தி உவமையை விரித்துச் சொல்ல இடம் உண்டு.) 432