பக்கம்:கனிச்சாறு 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 கனிச்சாறு – முதல் தொகுதி


25  செந்தமிழ்ப் பாவை!

தாய்மைக் குலத்தீர் ! தமிழ்மொழிக்கே யாம்பாடும்
வாய்மைத் தமிழ்ப்பாவை வந்திங்குக் கேண்மினோ !
தூய்மையுறும் நெஞ்சம் ! சுடர்மணிப்பூண் தோள்கலிக்கும்
பேய்மை யகலும் ! பிறவி நலம் வந்தெய்தும்!
மாயப் புரைசால் மலிவினைகள் மாண்டொழியும்
சேயவிழ்வாய் நாறச் சிமிழ்மார்பு அமிழ்தூட்டி
ஏய அவர்செவியில் எந்தமிழ்ப்பால் ஊட்டுதற்கே
ஆய பொழுதும் அலர்ந்தேலோ ரெம்பாவாய்! 1

மன்னும் பிறவி மடுக்குந் திருக்குலத்தீர் !
முன்னம் பிறப்பறியோம் ! முந்துகடல் வாங்கியுண்ட
பன்னூல் சிறப்பறியோம் ! பாவையரீர் ! பாழ்பட்ட
இன்னூல் கணக்கிங் கெடுத்தறியோம்; எந்தமிழ்க்கே
தொன்னூல் இவையென்று தோற்றுவன யாம்கண்டோம்;
நன்னர் முடிவெடுத்தோம்; நாணாமே, நாணாமே,
என்னெமக்கே வந்துற்ற தென்றே இமைதிறவாது
இன்னும் துயில்வீர் ! எழுகேலோ ரெம்பாவாய்! 2

போதார் திருவைப் புரைவில்லாச் செந்தமிழைச்
தீதார் பிழைநாவின் வல்படையோர் சீரழிக்கப்
போதரு கின்றார்; புறப்பட்டார்; பொன்னொளிர்கல்
காதார் பிறைநுதலீர்; கண்பாடுங் கொண்டீர்காண் !
ஈதார் கடனோவென் றெண்ணாதீர் ! ஈண்டெழுந்த
பேதைப் பெருங்கூட்டம் பின்னிட் டடங்கிடவே
ஊதுமினோ வெண்சங்கம் ! வெற்றிப்பால் ஊட்டுமினோ !
மாதர் குலமே, மலையேலோ ரெம்பாவாய்! 3

காமம் மதர்க்கும் கருவிழிமேல் வில்லிமைக்கே
யாமத் திருளைக் குழைத்திட்டு, நீள்குழற்கே
பூமுன்னாள் மாலை முடித்தாய்; புலர்பொழுதில்
ஊமைச் செவிடா உறங்குதியே ! ஒண்டமிழ்க்குத்
தீமை புரிவார் திறங்கலங்க, பூண்பொடிய
மாமைப்பொற் றேமல் மலியும் மணிவயிற்றில்
ஏமம் புரிய இளையோரைப் பெற்றெடுக்குந்
தாமரைப் பூங்கண் திறவேலோ ரெம்பாவாய்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/65&oldid=1419388" இலிருந்து மீள்விக்கப்பட்டது