பக்கம்:கனிச்சாறு 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  55

விழிக்கப் படாதென வெருட்டிய தாரே?
வீழ்ந்திவண் கிடவென மருட்டிய தாரே?
அழிக்கப் படாததா பகை,எழுந் திட்டால்?
ஆர்க்கப் படாதன வா,முர சங்கள்?
செழிக்கப் படாததா தமிழரின் வாழ்வு?
செகுக்கப் படாததா வடவரின் சூழ்ச்சி?
ஒழிக்கப் படாதன வா, மிடி சோர்வு?
ஒற்றுமை யுற்றன ரெனில்வரும் வாழ்வு!

உன்னையே உன்னவன் தாழ்த்துதல் செய்வான்!
உன்னுரை உன்செயல் பொய்யெனச் சொல்வான்!
பின்னையே குழியினைத் தோண்டமுற் பட்டான்!
பித்தனென் றுன்னையிங் கிகழுதல் செய்தான்!
சின்னதாய் அறிவெனும் கனல்புகக் கண்டால்
சீர்த்தது பேரறி வெனப்புகழ் செய்வான்!
‘என்னை நீ எழுதுதல் பேசுதல்' - என்பான்
'எவர்க்கது தேவையாம்' - என்றிகழ் செய்வான்!

அன்புடைத் தமிழனே! ஒன்றுரைக் கின்றேன்;
ஆருடை மொழியிது நாள்வரை கேட்டாய்?
என்பினில், சதையினில், குருதியில் எல்லாம்
எண்ணிலா ஆண்டுகள் அடிமைமேற் கொண்டாய்!
தின்பதில், உடுப்பதில், துயில்வதில் எல்லாம்
திகழ்ந்தநல் அடிமைவாழ் வின்பமென் கின்றாய்!
மன்பதை திரிந்தது; திரிந்ததுன் உள்ளம்!
மற்றிவண் கூறுதற் கேதுகாண் உண்மை!

இன்னமும் கூறுவேன்; இறுதிவந் தில்லை!
இருள்மடிந் தொளிவரும்! ஒளிவரும்! அக்கால்
முன்னவை மீட்பதும் வாழ்வதும் உண்மை!
முழக்கிடு! வழக்கிடு! சோம்பியி ராதே!
சின்னவை! - இழிந்தவை நினைவுகள் தூர்ப்பாய்!
சேர்ந்துகொள் உன்னினம்! ஒற்றுமை காண்பாய்!
சொன்னவை நினைவுகொள்! இணைகநீ இன்றே!
சொந்தஉன் மொழியினை, நாட்டினை ஆள்வாய்!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/82&oldid=1419367" இலிருந்து மீள்விக்கப்பட்டது