106 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
65 பொய் சாகும்; மெய் வெல்லும்!
பொய் சாகத் தான் சாகும்;
புரட்டழியத் தான் அழியும்;
மெய் பூத்துக் காய்த்துக் குலை தள்ளும் - அது
மேன்மேலும் கனிந்து பகை வெல்லும்!
இருள் போகத் தான் போகும்;
இழிவகலத் தான் அகலும்;
மருள் மாய உரைகள் அடி சாயும் - ஆர
வாரத்தின் கொழுமை முடி காயும்!
வயிறெரியத் தான் எரியும்;
வாய் நோகத் தான் நோகும்;
கயிறுதிரிப் போர்க்கு நமைக் கண்டால்! - ஒரு
காலம் வரும்; போற்றுவர் பூச் செண்டால்!
துயர்சேரத் தான் சேரும்;
துணை வருந்தத் தான் வருந்தும்;
அயர்வுருதல் மறவர்க் கழ கன்றே! - பேர்
ஆண்மையன்றோ பொறுத்தல்; குணக் குன்றே!
உளம் நோகத்தான் நோகும்;
உயிர் சோரத் தான் சோரும்;
விளங்கட்டும் தமிழர் குமு காயம்! - உயிர்
வெல்லமில்லை; உரிக்கும்வெங் காயம்!
உடல் வாடத் தான் வாடும்;
உயிர் போகத் தான் போகும்;
கெடல் வந்த போதில் அறங் காக்கும்! - மெய்
கிளைகிளையாய்த் துளிர் விட்டுப் பூக்கும்!