பக்கம்:கனிச்சாறு 2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  113


70  எம்மோர் அரசமைத்த முரசொலிக்கும்.....!

அந்தநன்னாள் விரைவில்வரும்; விரைவில்வரும்! எம்மோர்
ஆரியத்தால் உருக்குலைக்கப் பட்டநிலை சாகும்!
சொந்தநலன் மீண்டுவரும்; செந்தமிழர் யாரும்
சூடுகண்ட வேங்கையென விழித்தெழுந்து கொள்வார்!
விந்தமுதல் தென்குமரி எல்லைமட்டும் அன்றி
வியனுலகம் யாவையுமே எந்தமிழ்த்தாய் ஆண்ட
முந்தைவர லாற்றினுண்மை முழங்கும்உல கெல்லாம்;
மூத்ததமிழ் யாத்தநலன் பயின்றிடுவார் கோடி! 1

முக்கழகம் மெய்யாகும்; மூங்கையரும் சொல்வார்;
முன்பிருந்த குமரிநிலம், பஃறுளியாற் றுண்மை
தக்கபடி யாய்ந்துலகம் ஏந்திவர வேற்கும்;
தமிழெழுந்து நிலன்முழுதும் உலாவப்புறப் பட்டே
ஒக்கபடி திரவிடமாய், ஆரியமாய், கிரேக்க
இலத்தினுமாய், சாக்சனிய, பழம்பார சிகமாய்,
மிக்கவுரு மாறியொரு சமற்கிருதந் தோற்றி
மீண்டுவந்த செய்தியெல்லாம் பேருலகம் ஏற்கும்! 2

மறைந்திருந்த வரலாறு இருள் சீழ்க்குங் கதிராய்
மாணிக்க ஒளிவீசித் திகழ்கின்ற போழ்தில்,
உறைந்திருந்த தமிழ்க்குருதி உருகிவிரைந் தோடும்!
ஊமையராய் வாழ்ந்திருந்த தமிழரின்நா ஆர்க்கும்!
குறைந்திருந்த மறவுணர்வு குமிழியிட்டுப் பாயும்!
குரங்கென்றும், அடிமையென்றும் ‘இதிகாசம்' பேசும்
கறைந்தபழம் புழுக்குரைகள் தீக்கிரையாய் மாயும்!
காய்கதிர்முன் பனிப்போலும் பகைசுவறிப் போகும்! 3

வல்லடிமை தோய்ந்தவராய் ஆயிர நூற் றாண்டாய்,
வந்தேறி யுட்புகுந்த நன்றியிலார் நாவின்
சொல்லடிமைப் பட்டவராய்ச் சுருண்டிருந்த மக்கள்
சூடுற்றுப் பீடுற்றுப் பாய்ந்திடும் அப் போழ்தில்,
புல்லடியின் கீழ்வேராய்ப் புழுதியொடு மண்ணாய்ப்
புதைந்திருக்கும் பார்ப்பனரின்
கொட்டமெல்லாம் வேங்கை
வல்லடியின் தாக்குதல்முன் வாலறுந்த நரியின்
வக்கணைபோல் - வெள்ளெலும்புச் சுக்கலெனப் போகும்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/149&oldid=1424771" இலிருந்து மீள்விக்கப்பட்டது