பக்கம்:கனிச்சாறு 2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  155


95  இதுதான் தமிழ்நாடு ! இவன்தான் தமிழன் !

இதுதான் தமிழ்நாடு; இவன் தான் தமிழன்!
என்றென் றைக்கும் இவன் மாறான்!
எறும்புமுன் னேறி யானையை வீழ்த்தும்;
ஏணிவைத் தேற்றினும் இவன் ஏறான்!
வெதுவெதுப் பாக - நாக்கடிப் பாக -
வெற்றுரை ஆர்ப்பான்; வினை காணான்!
வீணரைப் புரப்பான்; கால்களில் வீழ்வான்;
வெறுங்கை வீசுவான் பழி நாணான்!

எண்ணிக் கொள்ளுங்கள்; இவன்தான் தமிழன்!
எவர் உணர்ந் தாலும் இவன் உணரான்!
எத்தனை நூறோ டாயிரம் ஆண்டுகள்
ஏகினும் விரற்கடை இவன் வளரான்!
பண்ணிக் கொள்ளுங்கள், மனத்தினில் உறுதி!
பல்லிளிப் புக்கும் வழி நிற்பான்!
பாசம் பிடித்து மொழுக்கெனத் தேய்ந்தஓர்
பழங்கா சுக்கும் தனை விற்பான்!

எழுதிக் கொள்ளுங்கள்; இவன்தான் தமிழன்!
எந்தநாட் டிலுமே இவன் கிடப்பான்!
எச்சில் உண் டிக்கும் கழிகந் தலுக்கும்
எவன்பின் னாலும் இவன் நடப்பான்!
புழுதியிற் கிடப்பான், புன்மைகள் நினையான்;
பொய்மைக்கும் போலிக்கும் விலை தருவான்!
புதுமைகள் பூக்கும்; புரட்சிகள் மலரும்;
புதுவாழ் வமைத்திட இவன் விரும்பான்!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/191&oldid=1424801" இலிருந்து மீள்விக்கப்பட்டது