பக்கம்:கனிச்சாறு 2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


94  இற்றைத் தமிழரின் இழிநிலை!

இற்றைத் தமிழனின் இழிநிலை, எனக்கு
மற்றைத் துயரினும் மாணப் பெரியது!

மொழியினில் இவனொரு தாய்தவிர் மூங்கை!
முன்னோர் மொய்ம்பினை அறிகிலா மூடம்!
இனத்தை எதிர்ப்பதில் நாயினும் இழிந்தோன்!
எவர்க்கும் அடிமைசெய் இழிநிலைத் தரகன்!
நாட்டுப் பற்றினில் காட்டுக் குரங்கிவன்;
நாணமும் மானமும் நழுவிய தசைத்திரள்!
அரசியல் அரங்கிலோர் அடியிலா ஏனம்!
அயலார்க் குழைப்பதில் மயல்படாக் கழுதை!

குட்டக் குட்டக் குனிவுறும் கூனன்!
கோபுரப் பெருமையைக் குப்பையில் சாய்த்தோன்!
பொருள்செய் முயற்சியில் இருள்தோய் பூச்சி!
போக்கிலா துழலுமோர் நோக்கிலா ஏதிலி!
சமயச் சேற்றினில் அமையப் புதைந்தவன்!
சாதிச் சாய்க்கடை நெளிந்திடும் புழு, இவன்!
ஏற்றமும் மாற்றமும் நினையா இழி மகன்!
எதிரிக் குழைத்திடும் இனியநல் ஏவலன்!

தன்மதிப் பிழந்த தக்கைக் கொழுந்து!
தாழ்ச்சிக் குட்டையின் மீட்சியில் தவளை
கொடுத்த கை முறிக்கும் நன்றிக் கொலைவன்!
குலத்தைப் பிளந்திடும் கோடரிக் காம்பு!
கள்ளமும் கயமையும் காய்த்திடும் முள் மரம்!
காட்டிக் கொடுத்திடும் கழிசடைப் பிறவி!
தலைமையின் முதுகில் தைக்குறுங் கைவாள்!
தன்னலம் கணக்கிடும் தந்திரக் குறு நரி!

ஆய இப் பெருமைகள்' அனைத்தும் குறைவற
ஏய விளங்கிடும் ‘தமிழனை' எண்ணியே,
மூளையும் உருகி முழுநலங் கருகி
வேளையும் பொழுதும் நாளும் வெம்பிச்
சுழலும் என்னுயிர் சுருக்கெனக்
கழலும் நாளைக் கணக்கிட் டிருப்பனே!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/190&oldid=1424799" இலிருந்து மீள்விக்கப்பட்டது