பக்கம்:கனிச்சாறு 2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


151

வீறுற்று எழுவீரே!


நரிமை மனங் கொண்டவர் பால்
நயந்து, நயன் பேசி
உரிமைதரக் காலமெலாம்
உளங்கசிந்து நின்றோம்;
உரிமைதரக் கால மெல்லாம்
உளங்கசிந்து நின்றும்,
சரிமைநிகர் அதிகாரம்
சமவுடைமை காண,
ஒருமை மனங் கொண்டிலரே!
ஊமையரா நாமும்?

ஊமையரா நாமும்? இங்கோர்
உணர்வுமற்றா போனோம்?
ஆமையரா நாமும்? நல்ல
ஆண்மையற்றா போனோம்?
ஆமையராய் நாமும் நல்ல
ஆண்மையற்றுப் போனால்,
ஏமமெனக் காத்துவந்த
இனமழிந்து போக,
தீமைமேலும் மேலும்வந்தே
திசையழிந்து போவோம்!

திசையழிந்து போய்விடுவோம்;
திருவழிந்து போவோம்!
வசைமலிந்து பெருகிவிடும்;
வழிமுறையும் ஏசும்!
வசைமலிந்து பெருகிவிட
வழிமுறையும் ஏச,
அசைவற்றா நாமிருப்ப(து)?
அடடா, ஓ! தமிழீர்!
விசையெழுந்து பாய்ந்ததுபோல்
வீறுற்றெழு வீரே!

-1990
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/258&oldid=1437468" இலிருந்து மீள்விக்கப்பட்டது