பக்கம்:கனிச்சாறு 2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


160

செயலலிதாவே! செயலலிதாவே!


செயலி தாவே! செயலி தாவே!
உய்யவந்த தமிழினத்தை உய்யாது தடுத்து,
நையவைத்து நாளும் நன்கு நலியவைத்துப்
பைய அழித்துவரும் பழிசேர்செய லலிதாவே!

மேல்மேலும் பார்ப்பனர்க்கும் வடவர்க்கும் செல்வர்க்கும்,
கால்மேலும் கைமேலும் வந்துவிழும் கயவர்க்கும்
ஆக்கம் பலசெய்தே அற்றைத் தமிழினத்தைத்
தாக்கமுறச் செய்யும் தருக்குடைய ஆரியையே!

எத்தனைதான் கூறிடினும் எவரெடுத்து விளக்கிடினும்
மொத்தையுன் உடலுக்கு எள் முனையும் உறைக்காது!
தானே தருக்கித் தலைவீங்கிப் போகின்றாய்!
ஆனை உடம்பை அலட்டிக்கொள் ளாமலே
ஊரூராய் வலம்வந்தே ஒன்றும் அறியாத -
கூறில்லா - மக்களையே ஏய்த்துக் குவிக்கின்றாய்!

வெட்கம் துளியுமின்றி வீதியெல்லாம் வெட்டுருவம்
மட்குதிரை நிற்பது போல் மலையுயரம் நிறுத்துகிறாய்!
சூடு சுரணையில்லை; சொல்வதில் உண்மையில்லை!
ஆடல் மகளே! உன் அழிம்புகட்கும் எல்லையில்லை!
முரசு கிழியும் உன்றன் முழக்கமென்று நிற்குமோ?
அன்றே, இத் தமிழினமும் அழகுத் தமிழ்நாடும்
நின்று உயிர் பிழைக்குமென நெஞ்சார நினைப்பாயே!

-1992
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/270&oldid=1437481" இலிருந்து மீள்விக்கப்பட்டது