பக்கம்:கனிச்சாறு 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  11

அற்றைப் புகழ்நலன்கள்
அற்றனவென் ஆமாறு
வெற்றுப் புலவோரும்
வெய்ய கொடுவினையும்
கற்றுப் பயன்கொளுவாக்
கல்வி வரல்முறையுஞ்
சுற்றிச் சுழற்றுகின்ற
சாதிச் சுழல்வளியும்
இற்றைத் தமிழகத்தில்
எங்கணுஞ் சீறியெழும்
புற்றரவம் போலப்
புறப்பட்டுச் சூழ்வனகாண்!

எற்றே இனியே
இவைபோகி யாமடியோம்
நெற்றுப் பயிர்போல்
நினைவு முதிர்வதுவே
சீறி வடமருங்கில்
செந்தமிழை மேயவரும்
ஏறி இறங்கு குரல்
இந்தி எனுமொழியும்
ஆறி யடங்கிநின்ற
ஆரியமும் ஆங்கிலமும்
கூறிட்டுச் சாய்க்குங்
கொழுமைத் தமிழுணர்வை
ஏறிட்டுப் பார்த்தே
எழுந்துயர்ந்த வன்குரலாய்
வீறிட்டுப் போருமிட்டு
வேலியிட்டுக் காவாய்
மாறிட்டு நம்முடைய
மானந் தனைவிட்டுச்
சோறிட்டார் தாம் போற்றிச்
சோர்ந்தழிந்து போவதுவோ!

-1955
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/47&oldid=1523581" இலிருந்து மீள்விக்கப்பட்டது