பக்கம்:கனிச்சாறு 3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  41


38  அதர்ந்தெழுவாய்!

மொழிக்கலப்பும் இன இழிவும் பண்பாட்டு வீழ்வும்
முழுஅடிமை அரசியலும் பொருளியலும் உன்னை
விழிக்கவிலா உறக்கத்தில் ஆழ்த்தியடி வீழ்த்தி,
விலங்குகளாய்ச் சமைத்தனகாண்!
உணர்கிலையே! தமிழா!
பழிக்கொருவ னாகினையே! விழிக்கிலையே இன்னும் !
பகையுணர்ந்தே நின்தடந்தோள்
நிமிர்ந்தெழுவா யானால்,
அழிக்கலுறும் பெரும்பகையும் தூள் தூள் ஆ காதோ!
அதர்ந்தெழுவாய், இமைதிறந்தே! அடலேறே! களிறே!

-1975



39 வீர நடை நடப்பீர் ! வீர அணி வகுப்பீர்!

நடை நடப்பீர், வீர நடை நடப்பீர்!
நாடு கேட்பீர், தமிழ்நாடு கேட்பீர்!
படை திரட்டிப் பரணி பாடிப்
பாய்ந்து வீரம் தோய வந்து
நடை நடப்பீர்!வீரநடை நடப்பீர்!
நாடு கேட்பீர் தமிழ்நாடு கேட்பீர்!

அணிவகுப்பீர், வீர அணிவ குப்பீர்!
ஆட்சி கேட்பீர், தமிழ்ஆட்சி கேட்பீர்!
துணிவு தோயும் தோழன் மாரே,
தோழி மாரே, விரைந்து வந்து,
அணி வகுப்பீர், வீர அணி வகுப்பீர்!
ஆட்சி கேட்பீர், தமிழ் ஆட்சி கேட்பீர்!

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/70&oldid=1424560" இலிருந்து மீள்விக்கப்பட்டது