பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 171
கருக்கொளும் கற்பனை உலகினிற் புகுந்து
காதலுங் கன்னியும் பாடிட விழைந்தாய்!
திருக்கொளும் காட்சியை நினைவுப் பசிக்கே
தீனியாய் எண்ணிநின் தூவலை எடுத்தாய்!
உருக்கொளும் மாந்தரிற் பற்பல கோடி
உணவும் உடைகளும் கூரையும் இன்றித்
தெருக்களிற் புரளும் மக்களைப் - பாவல,
தேற்றி உயர்த்திடும் பாடலைப் பாடுவாய்!
3
இலக்கணப் புலமையால் மொழிமழை பொழிந்தே
இலக்கியம் பாடிட ஏடெடுக் கின்றாய்!
துலக்கிய காட்சிகள் ஆயிரங் கோடி
தூவல் மையினால் படம்பிடிக் கின்றாய்!
புலக்கவின் கொண்டவை அவையெனப் பேசியே
புகழ்ந்துரை யாடிடப் போற்றிடச் செய்வாய்!
கலக்குறும் வறுமை மாந்தரைப்-பாவல,
கவின்கொள உயர்த்திடும் பாடலைப் பாடுவாய்!
4
காலமும் வானையும் கதிரையும் நிலவையும்
காற்றையும் மலைதரும் ஊற்றையும் கண்டு,
கோலமும் காட்சியும் உன்மனக் கூர்மையால்
கொண்ட விளக்கமும் பற்பல விண்டாய்!
ஞாலமும் நாளையும் நாளையும் பாடி
நலிவினும் மெலிவிலும் தப்பிய துண்டா?
ஓலமும் நீருமாய் உழல்வரைப்-பாவல,
உயர்த்தி மலர்த்திடும் பாடலைப் பாடுவாய்!
5
விண்ணையும் மண்ணையும் உலாவரப் போந்தாய்!
வீட்டையும் நாட்டையும் விளைத்திட மறந்தாய்!
எண்ணரும் புதுமையால் செயல்பல செய்தாய்!
ஏழ்மையை விரட்டிட என்பயன் கண்டாய்?
திண்ணருஞ் சொல்லையும் பொருளையும் திணித்துத்
தினவுறும் மனத்தினை அமைவுறச் செய்வாய்!
உண்ணரும் பசியினால் நலிவரைப்-பாவல,
ஊக்கி உயர்த்திடும் பாடலைப் பாடுவாய்!
6