இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 129
130
ஒப்புவித்திடுவாய், உன்னை!
ஒப்புவித் திடுவாய், உன்னை - தம்பி
ஒப்புவித் திடுவாய், உன்னை!
தப்பித்துக் கொள்ள,நீ நினையினும் ஒளியினும்
தவறாமல், உன்றனை அழித்திடும் காலம்!
(ஒப்பு)
எப்பொழு தும்,நீ இருந்திட விரும்பு!
இலையெனில் மறைந்திடும் உலகில்,நீ துரும்பு!
ஒப்புயர் வில்லாத அறிவில், நீ அரும்பு!
உனக்குண்டு மலர்ந்திடும் வாழ்க்கையின் வரம்பு!
(ஒப்பு)
தொண்டுசெய் மக்கட்(கு); உன் தோள்களோ இரும்பு!
தொழிலாளர், உழவர்கள் உறவை, நீ விரும்பு!
மண்டிடும் துயர்துடை, அவர்பக்கம் திரும்பு!
மனத்தினில் இனித்திடும் தொண்டெனும் கரும்பு!
(ஒப்பு)
தாய்மொழி, தாயினம், தாய்நாட்டு நினைவே
தன்நினை வாக்கிடு; மற்றெல்லாம் கனவே!
ஓய்வின்றி உழை!மக்கட் குடை,மனை, உணவே
ஒப்பவே கிடைக்கச்செய், அழிகிலாய்! எனவே,
(ஒப்பு)
-1984