உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


எனக்குத்தான் உரிமை என்பேன்; நேற்று வந்த
இன்னொருவன் தனக்குரிமை என்பான்; ஆனால்
சினக்கத்தான் துணிவேனோ? பால்ம ணக்கும்
சிறுவாயை அழகுபெறக் கூட்டி, என்றும்
இனிக்கின்ற தமிழ்மொழியால் “அப்பா” வென்றே
இயம்புகையில், அத்தான், நான் மகிழ்ந்து போவேன்;
தனிக்குன்றச் செந்தோளைக் காட்டு தற்குத்
தடம்பார்த்துக் கிடக்கின்றேன்! இங்ஙன் - கிள்ளை! 5

-1957
 

39

ஒட்டு மாங்கன்று


முல்லை! இவ் வீட்டிற்கு வந்தின் றோடு முத்திங்க ளானாலும், உனக்கி ருக்கும் தொல்லையினை அறியேன்; உன் கணவர் உன்னைத் தீண்டாத மென்மலராய் வைப்பார் என்றும், எல்லையிலாத் துன்பம்நீ அடைவாய் என்றும் எள்ளளவும் எண்ணவில்லை! நேற்று மாலை கொல்லைக்கு நான்வர, நீ மறைந்து நின்றே கொடுத்ததுவும் கடிதமென்றே அறியவில்லை! 1

காலையில்நான் அலுவலகம் செல்லும் போது கதவிடுக்கில் விழிசெலுத்தி முறுவல் - பூப்ப தூஉம் மாலையில்நீ குழல்முடித்துப் பின்னல் தொங்க மல்லிகைப்பூச் சரத்தையிட்டே உவப்ப தூஉம் சேலையினை வகைவகையாய் வேளைக் கொன்றாய்ச் சிற்றிடையில் ஏற்றியேற்றி உவப்ப தூஉம் ஓலையினைப் படித்துணர்ந்தேன்! ‘உன்றன் செய்கை ஒவ்வொன்றும் எனக்கேதான்’ என்னும் உண்மை! 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/78&oldid=1445146" இலிருந்து மீள்விக்கப்பட்டது