பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 57
42
தீதிலாது இனம் ஆற்றுவேன்!
தூய்மை யான, ஓர் உளத்தினை - ஒளி
துலக்க மான, ஓர் அறிவினை,
வாய்மை யான, ஓர் உணர்வினை - ஒரு
வளப்ப மானநன் னெறியினைச்
சேய்மை யான, ஓர் இயல்பினை மிகச்
சிறந்த தான, ஓர் உயிரினை,
நோய்மை யானஇத் தமிழர்கள் - தொலை
நோக்கு வார்என நினைத்திலேன்!
காணு மாறொரு தாழ்வினை - அறக்
களையு மாறொரு கடமையை,
நாணு மாறொரு நேர்மையால் - அட
நானும் நலிவுற ஆற்றினேன்!
வேணு மாறிவண் தமிழர்கள்! - அதை
விளங்கி னாரெனக் கருதிலேன்!
பேணு வாரென நம்பிலேன்! - எனில்
பின்னும் அதனையே செய்குவேன்!
குற்றங் குறைகளும் சாற்றுவார்! - யான்
கூறும் கூற்றையும் மாற்றுவார்!
தொற்றும் மடமையில் உழலுவார்! - ஒரு
தோழமை உளம் அறிகிலார்!
கற்றும் கலாதவர்போலவே - பெருங்
கயமை செய்வரை நம்புவார்!
மற்றும் யான்எனச் செய்குவேன் - மன
மாசி லா(து)இனம் ஆற்றுவேன்!
உண்மை யிலாதவர் நம்புவார் - ஓர்
உண்மை உளத்தினை நம்பிலார்!
வெண்மை உரைகளைப் பற்றுவார் - தூய்
வெள்ளை நெஞ்சினை எற்றுவார்!
பெண்மை மனமென ஐயுற - ஒரு
பேதை போலெனைப் பேசுவார்!
திண்மை தவித்திடல் அல்லனாய் - ஒரு
தீதி லா(து)இனம் ஆற்றுவேன்!