பக்கம்:கனிச்சாறு 7.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  193


பித்தரை, மூடரை வெருகுவர் காண்!
பிணியரைக் கண்டுள முருகுவர் காண்!
முத்தொளிர் நகைச்சியும், முகில்தோளும்
மூதறி வினர்துணை பருகுவர் காண்!
இத்தரை இன்பொருள் ஈட்டாரோ?
ஈடறு பெரும்புகழ் நாட்டாரோ?
பத்தறு பேறும் அவர்பெறவே
பன்னிரண் டாம்பிறை வளருதியே! 12

சுரிகுழல், ஒளிநுதல் உவந்தனள் காண்!
சுளையிதழ் மலர்முகஞ் சிவந்தனள் காண்!
பிரிவில! பிழையிலள்! பினைவேறு
பிடிப்பிலள்! மகிழ்வுளம் நிவந்தனள் காண்!
சரிவில திவர்தொடர் முரிவிலதே!
சாந்துணை ஒன்றெனுங் குறியுளதே!
பரிவுள னெம்முரை மெய்யுரையேல்
பதிமூன் றாம்பிறை வளருதியே! 13

பெண்புது நலமிவன் நுகர்ந்தனன் காண்!
பெருமிடி படுமுறை தகர்ந்தனன் காண்!
கண்புனல் வழிதரக் காண்டவள்பால்
கணம்பிரி விலையெனப் பகர்ந்தனன் காண்!
நண்பினில் உயிர்ப்புற பிரிவுறுமோ?
நலிவிலும் பெருமகிழ் வுரிமையினே!
பண்பினி லுறுமொழி பயன்பெறுமேல்
பதினான் காம்பிறை வளருதியே! 14

இருளொரு கோடெனக் கீற்றாகி
இழியுகிர் வாளெனச் சுளையாகி
உருளலை ஓடமென் நுதலாகி
ஊசற் குழையுடன் ஓடாகித்
திரள்வெண் ணெய்கடை மத்தாகித்
தேனடைச் சங்கென வயிறாகி
அருளொளிர் முகமெனும் முழுநிலவே
அணைந்தவர் வாழ்வென ஒளிருதியே! 15

-1961
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/238&oldid=1447103" இலிருந்து மீள்விக்கப்பட்டது