பக்கம்:கனிச்சாறு 7.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

உடுத்திருக்கும் சேலையொரு முழமாமென்றால்
உலவிவரும் ஆண்களுக்கோர் கோவணந்தான்!
எடுத்தெறியும் செல்வர்மனைப் பொருளையெல்லாம்
ஏந்துகின்ற வயிறுடையார் நகரில்கண்டேன்!

படுத்தற்குப் பாயில்லாத் துன்பம், பெற்ற
பிள்ளைக்குப் பாலில்லாத் துன்பம், வாழ
நடுத்தெருவைப் பயன்படுத்திக் குடிலொன்றில்லார்
நலிவோடு, தலையணைக்கோ ருறையில்லாது,
படுத்திருக்கும் ஓர்எத்தன் கொள்ளுந்துன்பம்,
படித்தற்கும், கேட்டற்கும் ஒன்றாம்; ஆனால்
உடுத்தற்கே யுடையில்லா துழலுந்துன்பம்
உலகளவாம்; ஓரணுவாய் மாற்றான்துன்பம்!

துன்பத்தின் ஆழத்தைக் கண்ணீர் ஊ....
துளைக்கின்ற கடும்மிடியை, உடையில்காண
என்புத்தோல் உடலையெல்லாம் கண்ட...
எழில்துள்ளி விளையாடும் இடத்தில்மக்கள்
இன்பத்தோ டோங்குமனை மீதில்வாழ்ந்தே
இருப்பாரை மினுமினுக்கும் பெண்கள்தம்மோ
டன்பொழுகப் பேசியவர் வாயினிப்பில்
ஆழ்ந்தாரை யெல்லாம் நான் கண்டேன் அங்கே!

கைகோத்துக் கொண்டிருவர் போவார்தம்மைக்
கைநீட்டி யொருகுருடன் கதறிக்கேட்பான்
மெய்வேர்த்த வாறொருவன் இழுப்பான்வண்டி;
மேலேறித் தூங்கிவிழுந் தெழுந்து கையில்
பைபார்த்த வாறுபணந் தொட்டுப்பார்த்துப்
பல்லிளிப்பான்; ஒருபுறத்தில் இருவர்கூடி
மைவார்த்த கண்ணுடையாள் வரவைக்கண்டு,
மனச்சோர்வு நீங்கிமகிழ் வெய்துவோரே!

சென்னை ஒரு பெருநகரம்! உலகில்இன்னும்
சிறப்புள்ள நகரங்கள் கணக்கில் இல்லை!
சென்னைக்குச் சென்றேன்ஓர் உண்மைகண்டேன்!
செறிந்துள்ள காடுகளின் நடுவில் உள்ள
மண்ணைக்கொண் டொருகுடிசை கட்டிவாழ்ந்து
மலைகளையும் முகில்களையும் கண்டுகண்டு
கண்ணுக்கும் கருத்திற்கும் சேர்க்கும் இன்பம்
கவினுள்ள நகரத்தில் காணேன்காணேன்!

-1953(?)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/63&oldid=1446014" இலிருந்து மீள்விக்கப்பட்டது