பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 101
ஏந்திநிலம் புதைந்தி ருப்போம்!
ஈவேந்தும் கடமையினால் விழா வெடுப்போம்!
எனினும்வினை இம்மி செய்யோம்!
(வேறு)
செந்தமிழர் தோள்களிலே மறமேற்றி
வைத்த செம்மல்! செழுந்தீம் பாவால்
எந்தமிழர் நாவினிலே இனித்ததமிழ்க்
கண்டெடுத்தே இழைத்த வேந்தன்!
அந்தமிழப் பெண்டிரெலாம் அணியணியாய்
ஆரியத்தால் அழிந்த போதில்
வந்துதமிழ் மானத்தைத் தூண்டுவித்து
மங்கையரைக் காத்த வீரன்!
கைம்பெண்கள் எழுகென்றான்! கடிமணங்கள்
செய்கென்றான்! கன்னிப் பெண்கள்
மொய்ம்புதரும் காதலினால் தாம்விரும்பும்
ஒருவனையே முடிக்க என்றான்!
செய்ம்புதுமை ஒன்றன்றே அவன்பாட்டில்!
சீர்திருத்தம் முழங்கச் செய்தான்!
பைம்புதரில் பூத்ததமிழ்ப் பூவானான்!
பைந்தமிழ்ப்பூந் தும்பி யானான்!
ஒட்டாரங் கட்டியொரு சொல்லுக்கே
ஊர்முழுதும் அலைந்து தேடிக்
கொட்டாவி விட்டுமுகம் மேல்பார்த்துக்
கீழ்பார்த்துக் குனிந்தெ ழுந்து
கட்டாத பாட்டெல்லாம் மொழிக்கயிற்றில்
கட்டியொரு ‘கவி’யென் றூரைத்
தெட்டாமல் தெட்டிவரும் பொய்ப்புலவர்
போல்அல்லன் புதுவை வேந்தன்!
மாணிக்கச் செழும்பரிதி மேற்றிசையின்
வானத்தில் மறையும் போதில்
ஆணிப்பொன் முத்தெனவே கீழ்த்திசையில்
நிலவொளிரும் அழகைப் போல
ஏணிக்குப் படிபோல ஒருசொல்மேல்
ஒன்றுவந்தே இறங்கு கின்ற
பாணிக்கிங் கார்புலவன்; பாவேந்தப்
புலவனல்லால்? பாவல் லோரே!