பக்கம்:கனிச்சாறு 8.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  153


“ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன்"

“சிம்புட் பறவையே சிறகை விரி, எழு!
சிங்க இளைஞனே! திருப்புமுகம்! திற விழி!
இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா?”

“வடநாடு தென்னாட்டை வீழ்த்தச் - செய்த
வஞ்சங்கள் சிறிதல்ல தம்பி!
இடைநாளில் மட்டுமா? சென்ற
இரண்டாயிரத்தாண்டு பார்த்தார்!
விடுவா யடா தன்னலத்தை - உன்
விடுதலை திராவிடர் விடுதலையி லுண்டு!”

“வஞ்ச நரிகள் புலிக்காட்டை ஆளுமோ?
வடக்கர் எம்மை ஆளவும் மாளுமோ?
அஞ்சும் வழக்கம் திராவிடர்க் கில்லை!
ஆள்வலி தோள்வலிக் குப்பஞ்சம் இல்லை!”

“சிங்கக் குகையினில் நரிக்கிடம் தந்தோம்!
செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்!
பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு!
போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு!”

“என்தமிழ் அன்னை துன்பம் நீங்கித்
தூய்மை எய்தித் துலங்குதல் காண்பேன்!
என்தமிழ் நாடு தன்னாட்சி பெற்றுத்
துலங்குதல் காண்பேன் தமிழர்
நலங்காண் பேன்நான் நானில மீதிலே!”
"வீடெல்லாம் விடுதலை முழக்கம் மேவுக!
ஊரெலாம் விடுதலை முழக்கம் உயர்க!
காலையில் விடுதலை முழக்கம் காட்டுக!
உண்ணுமுன் விடுதலை முழக்கி உண்க!
உறங்குமுன் விடுதலை முழக்கி உறங்குக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/167&oldid=1448570" இலிருந்து மீள்விக்கப்பட்டது