பக்கம்:கனிச்சாறு 8.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. ‘தமிழியக்கம்’ எழுச்சி!


(29.3.68 இல் மதுரை தியாகராயர் கல்லூரி முத்தமிழ் விழாவில்
பாட்டரங்கத் தலைமை யேற்றுப் பாடிய தலைமையுரை)

எங்கும் நிறைந்த இறைவன் கழல்வாழ்த்திப்
பொங்கும் அவன்றன் புகழ்வாழ்த்தி உள்ளவுயிர்ப்
பூட்டரங்கம் என்ன உலகோர் உவந்தேற்கும்
பாட்டரங்கம் வாழ்த்தவந்த பைந்தமிழ்ச் சான்றோரே!
வீட்டரங்கம் விட்டு வியன்தமிழில் என்னசுவை

காட்டுகின்றார் பார்ப்பமெனக் காணவந்த தாய்மாரே!
“எந்ததமிழ்காண்! எங்கள் இருவிழி காண்! உடல்காண்!
அந்தமிழ்தான் எங்களுடை ஆருயிர்காண்! சீர்காண்!
இயக்கங்காண்! எம்வாழ்வுக் கேற்றங்காண்! பூண்காண்!
மயக்கறுக்கும் உள்ளொளிகாண்! மாய்தலிலாப் பண்காண்!

விடிந்ததுகாண் நற்பொழுதும்! வீறுகிளர்ந் தோம்காண்!
பொடிந்ததுகாண் வெம்பகையும்! பூத்ததுகாண் மாட்சி!
எழுந்ததுகாண் எம்கூட்டம்! எங்கெங்கும் தூள்தூள்!
விழுந்ததுகாண் தாழ்ச்சியெல்லாம்! வீழ்ந்தது காண்மடமை!”
என்றெழுச்சிப் பண்பாடி ஏறுநடை போட்டுவரும்

மன்றஞ்சேர் கல்விவளர் மாணவர்காள்! மாணவிகாள்!
நீட்டுறக்கம் கொள்ளுகின்ற நீணிலத்தோர் நும்பாடல்
கேட்டுறக்கம் கொள்ளாமல் உள்ளம் கிளர்ந்தெழுந்தே
இன்பம் சிலிர்த்தும் இளைத்தவுடல் பூரித்தும்
துன்பம் தொலைக்கின்ற தொல்பெருமை கேட்டுணர்ந்தும்

நாட்டரங்க வாழ்க்கையிலே நல்வடிவம் கொள்ளவைக்கும்
பாட்டரங்கம் ஏறுகின்ற பைந்தமிழ்ப் பாவலர்காள்!
செந்தமிழ்தான் வெல்லாதோ? இந்தவுல குய்யாதோ?
அந்தமிழ்தான் நம்மையர சாளாதோ? ஈங்கிருக்கும்
மாந்தக் குலமெல்லாம் மண்ணுலகில் விண்சுடர்போல்
காந்தத் தமிழால் கனவுலகம் காணாதோ?
எல்லை பொடிந்தே இருங்கடலும் தான்விலகித்
தொல்லை மடிந்த துயர்மாந்தர் எல்லாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/17&oldid=1447554" இலிருந்து மீள்விக்கப்பட்டது