பக்கம்:கனிச்சாறு 8.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


இப்படிச் செய்திட எவையவன் கருவிகள்
தெரியுமா? உங்கட்குத் தெரியினும் சொல்லுவேன்!
புராண வேதங்கள் புகன்ற பொய்க் கதைகள்!
சடங்குகள்! சாதிச் சழக்குகள்! மதங்கள்!
செய்தித் தாள்கள்! வானொலி நிலையம்!

பொய்த்துத் தள்ளப் போதா வா, இவை?
இத்தனைக் கருவியும் அவனுக்குச் சொந்தம்!
செத்த தமிழன் பிழைப்ப தெப்படி?
அத்தனைத் தமிழனும் அவன் சொல்லும் பொய்களை
ஒத்துக் கொண்டுதான் ஒன்றிரண் டன்று
மூவராயிரம் ஆண்டுகள் முடங்கிக் கிடந்தான்!
நாவால் உரைக்கவும் உளமுயிர் நடுங்கும்!

பாரதி தாசனார் பாட்டுகள் ஆரியர்
வேரை அறுப்பன! விளைவைத் தடுப்பன!
வேதப் புரட்டுகள் தமைவெருட் டுவன!
புராணப் புளுகினைப் புதைத்து மூடுவன!
சாதிக் கொள்கையைச் சாகடித் திடுவன!
மதப்புரட் டுகளை மாய்த்துத் தொலைப்பன!
மூடக் கொள்கைக்குத் தீமூட் டுவன!
தமிழனுக் குணர்வைத் தந்திடும் தணல்அவை!
அமிழாக் கொள்கையை ஆர்க்கும் முரசவை!
வளைந்த கூனை நிமிர்த்தும் வகையின!
குலைந்த அவன்றன் குலத்தை இணைப்பன!
தமிழ்மொழிக் கவை எரு! தாழ்ச்சிக்கு நெருப்பு!
அமிழ்ந்த புகழ்ச்சியை அகழ்ந்த, மண் வெட்டிகள்!

பாரதி தாசன் பகர்ந்த மொழியிது :.

‘நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும்
நான் நான் நான்’

பாரதி தாசனார் உரைத்த சூள்இது :.

‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தமையீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாள் ஆகும்’

பாரதி தாசனார் நெகிழ்ந்துரைத் ததுஇது:.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/30&oldid=1447634" இலிருந்து மீள்விக்கப்பட்டது