பக்கம்:கனிச்சாறு 8.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  83


ஏறுவகை நல்லுணர்வோ டிங்கே உரைப்பதுடன்,
பெற்ற அழிவெல்லாம் பேச விருக்கின்றார்!
கற்றவர்கள் நீங்கள்! கருத்துநலம் கொண்டவர்கள்!
ஆகவே பாட்டை அமைந்திருந்து கேளுங்கள்!
போகவே கூடாது! புன்மைத் திரையரங்கில்
மூன்றுமணி நேரமும் மூச்சடைக்கும் வாறாக
ஆன்றமர்ந்து கேட்கிலையா? ஆங்கதுபோல் தீங்கின்றிப்
பாவலர்கள் கூறுகின்ற பாட்டரங்கைக் கேளுங்கள்!

தாவிவரும் இன்பம்! தழைத்துவரும் நல்லுள்ளம்!
மேவிவரும் வாழ்க்கை! மிளிர்ந்துவரும் நல்லாக்கம்!
தூவுகின்ற செந்தமிழால் தீங்குவரத் தோதில்லை,
ஆகவே பாவலரை அன்பால் அழைக்கின்றேன்
ஓகத் தமிழுரைக்க ஒவ்வொருவ ராய்வருவர்!

முடிவுரை

அன்புநிறை மாணவர்காள்! ஆன்றமைந்த சான்றோர்காள்!
இன்பமெழப் பாடி எழிற்றமிழின் நற்றிறத்தை
ஒவ்வொரு பாவலரும் இங்கே உரைத்திருந்தார்!
வெவ்வேறு பாச்சுவையால் உள்ளம் விரிந்திருந்தீர்!
சொல்லின் சுவைகண்டீர்! சொன்ன பொருள்கண்டீர்!
வெல்லத் தமிழிரின் விரிவான நற்கருத்தால்
இக்காலம் வாழ்கின்ற எந்தமிழின் மாந்தரையே
தக்கபடி காட்டிவிட்டார்; தங்கொள்கை சாற்றிவிட்டார்.
பாவலர்கள் மக்களையும் பாடிடுதல் நன்றென்னும்
ஆவலால் நாமும் அதைச் சுவைத்துக் கொண்டிருந்தோம்!
என்ன சுவை! என்ன சுவை! என்றே இடையிடையே
தின்னுந் தமிழ்ப்பாத் திறத்தினிலே மெய்மறந்தோம்!
அத்துடனே நம்கடமை ஆகி முடிந்த தென்றால்
மெத்தத் திருடர்நாம்! ஆமிதுவே மெய்யுரையாம்!

பல்வேறு மக்களையே பாவலர்கள் காட்டிவிட்டார்!
சொல்வேறு நம்மின் செயல்வேறா? சொல்லுங்கள்!
ஆசிரியர்க் கண்டோம்! அவர்வழியே கற்கின்ற
மாசற்ற உள்ளத்தின் மாணாக் கரைக்கண்டோம்!
இக்கால் இருவருக்கும் ஏற்றத்தாழ் வெல்லாமும்
தக்கபடி ஆய்ந்து, தகாதவற்றை நீக்கிவிட்டு,
மேலான கொள்கையினை மேற்கொண்டு வாழ்வதுவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/97&oldid=1448109" இலிருந்து மீள்விக்கப்பட்டது