பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

43


கோகிலா அழகியல்ல! சாரதா அதைத் தெரிந்துகொண்டாள். என்றாலும், கோகிலத்தின் நடை, உடை, பேச்சில் ஒரு தனி வசீகரம் கண்டாள். கோகிலத்தின் கண்கள் சிலமணி நேரங்களில் சாரதா, கருப்பையா நட்பைக் கண்டுவிட்டன. அவள் வாய், ஒரு நொடியில் விஷயத்தைச் சிங்காரவேலருக்குக் கூறிவிட்டது. அவரது மூளை உடனே சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. சிங்காரவேலரும் கோகிலமும் செல்வக்குடி பிறந்தோர். செல்வத்தை வீண் ஆட்டத்தில் செலவிட்டுப் பிறகு, உல்லாசக் கள்ளராயினர்! கோகிலம் தம் கணவன் வீட்டுக்கு வரவே கூடாது எனக் கண்டிப்பாக உத்தரவிட்டுவிட்டவள், சிங்காரவேலர் முதல் மனைவி பிரிந்த துக்கத்தை மறக்கமுடியுமா என்பவர், தாரமிழந்தவர். இருவருமாகப் பழைய ஜமீன் பெருமையைக் கூறி, ஊரை ஏய்ப்பதும் உலவுவதுமாகவே இருந்தனர்.

ராதா, கருப்பையா உறவு நல்லதொரு தங்கச்சுரங்கம் என்று சிங்காரவேலன் எண்ணினான். அவனுடைய சிந்தனையில் சூதுவலை உடனே வளர்ந்தது. கோகிலத்திடம் கலந்தான்.

“பேஷான யோசனை அண்ணா! சரியான யோசனை!”

“நம் யோசனை எது சரியானதாக இராமல்போய்விட்டது கோகிலம்”

“இந்த ‘விடுமுறை’ வியாபார தோரணையில் நமக்கு மிகச்சிறந்தது.”

“ஆமாம்! நாம் போடப்போகும் ‘முதல்தொகை’ மிகச் சொற்பம், கோடாக் நாதனின் கருணையால், நமக்குக் குறைவே ஏற்படாது” என்றான் சிங்காரவேலன்.

கோகிலம் அண்ணனின் சமர்த்தை எண்ணிச் சிரித்தாள்.