பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

57


இதே நேரத்தில் கருணானந்த யோகீசுரருக்கும், பரந்தாமனுக்கும் சச்சரவு வளர்ந்தது. மனச்சோகத்தை மாற்ற காவியணிந்த யோகியின் சேவையை நாடிய பரந்தாமன். காவி பூண்ட கருணானந்தன், காசாசை பிடித்த கயவன் என்பதை உணர்ந்தான். அவனுக்குத் தன் நிலைமையில் வெறுப்பு ஏற்பட்டது.

யோகியைக் கண்டிக்கத் தொடங்கினான். ஊரை ஏய்க்க உருத்திராட்சமா? கண்டவரை மயக்க காவியா? விபூதி பூசிக்கொண்டு விபரீதச் செயல் புரிவதா? என்று கேட்க ஆரம்பித்தான். யோகி ஒரு திருட்டு போகி என்பது பரந்தாமனுக்குத் தெரிந்ததும் இப்படிப்பட்டவனிடம் சிக்கி வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, வீணுக்கு உழைத்தோமே, என்று வருந்தினான்.

“நான் என் நிலைமையைப்பற்றி மட்டுமே கவனித்தேன், என் சுகம், என் மன ஆறுதல் என் அமைதியைப் பற்றி அக்கறை கொண்டனேயன்றி, என்னிடம் காதல்கொண்டு கட்டுகளில் சிக்கிக் கலங்கிய காரிகையின் கஷ்டத்தைப் போக்க நான் என்ன செய்தேன். அவள் எக்கதியானாள்? அவள் பக்கத்தில் அல்லவா நான் நின்று பாதுகாத்திருக்கவேண்டும் அதுதானே வீரனுக்கு அழகு. நான் ஒரு கோழை. எனவேதான், கோணல் வழி புகுந்தேன்” என்று மனங்கசிந்தான்.

நாளாகவாக, பரந்தாமனுக்குக் கருணானந்த யோகியிடம் வெறுப்பும் கோபமும் வளர்ந்தது. உலகின் முன் அவனை இழுத்து நிறுத்திவிட வேண்டுமென்று எண்ணினான்.

இந்நிலையில் சென்னை வந்து சேர்ந்தார் கருணானந்தர் தமக்கெனப் புதிதாகத் தயாரிக்கப்பட்டிருந்த மடத்தில் தங்கினார்.

சென்னை நாகரித்திலும் படிப்பிலும் மிக முன்னேறிய நகரமாயிற்றே, இங்கே யோகியின் தந்திரம் பலிக்-