பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

73


“சாரதா, கல்லில் பெயர் பொறித்துவிட்டால், காற்று அதனை எடுத்து வீசி எறிந்துவிடுமா!” என்றான் பரந்தாமன். அவனுடைய இருதயபூர்வமான அன்புகண்ட சாரதாவால் அழுகையை அடக்கமுடியவில்லை. இவ்வளவு அன்பு கனியும் பரந்தாமனிடம் வாழாது வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்டு வழுக்கி விழுந்ததை எண்ணினாள். ஆனால் அவன் என் செய்வான்!

சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருக்கி ஊற்றப்பட்டிருக்கும் பழக்க வழக்கம் சமூகத்தை ஒரு சருக்கு மரமாக்கிவிட்டது, அதில் தம்மிஷ்டப்படி செல்ல விரும்பி சருக்கி விழுந்து சாய்ந்தவர், கோடி கோடி, அதில் சாரதா ஒருத்தி.

“சாரதா ஒரே ஒரு கேள்வி. என்மீது கோபிப்பதில்லையானால் கேட்கிறேன்” என்றான் பரந்தாமன்.

“குணசீலா, உன்மீது எனக்குக் கோபமா வரும்? கேள், ஆயிரம் கேள்விகள்” என்றாள்.

“அந்தப் படத்திலுள்ள கருப்பையாவுடன் நீ காதல் கொண்டிருந்தாயா!” என்று சற்று வருத்தத்துடன் கேட்டான் பரந்தாமன்.

“கருப்பையாவிடம் காதலா! வலை வீசும் வேடன்மீது புள்ளிமான் ஆசைகொண்டா வலையில் விழுகிறது” என்றாள் சாரதா.

“தெரிந்துகொண்டேன். ஆம்! நான் எண்ணியபடிதான் இருக்கிறது. நீ அவன் மீது காதல் கொள்ளவில்லை. அவன் உன் நிலைகண்டு உன்னைக் கெடுத்தான். நீ என்ன செய்வாய் பருவத்தில் சிறியவள்” என்று பரந்தாமன் கூறிக்கொண்டே சாரதாவின் கரத்தைப் பிடித்துத் தன் மார்பின் மீது வைத்துக்கொண்டு, “சாரதா! நீ இதனுள்ளே எப்போதும் இருந்து வந்தாய். அன்று உன்னை முந்திரிச் சோலையில் கண்டபோது உன் முத்திரை