கம்பன் ஒரு தமிழ்ப் பெரும் கவிஞன். அவன் ஒரு மிகப் பெரிய பாவலன். பெரும் புலவன். கவியரசன். கவிச்சக்கரவர்த்தி என்று பெரும் புகழ் பெற்றுள்ளவன். கம்பன் தனது மாபெரும் “இராமாவதாரக் காவியத்தை” ப் படைத்ததன் மூலம் தமிழ் இலக்கியத்தை, உலகப் பேரிலக்கியங்களின் பகுதிக்கு உயர்த்தி உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறான். கம்பனுடைய படைப்பு தமிழ் இலக்கியத்தின் இமயம். அவனது கவிதைகளும் அதன் பொருளும் பெருங்கடலின் அடி ஆழம்.
கம்பன் ஒரு மாபெரும் சிந்தனையாளன். ஒரு சுயேச்சையான, சுய சிந்தனை கொண்ட பெரும் புலவன். தான் அண்டியிருந்த சோழ மன்னனிடம் கூட தனது சுயமரியாதைக்குக் குறை ஏற்பட்ட போது “மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ, உன்னை நம்பியோ தமிழை ஒதினேன்” என்றும், மன்னவனுக்கு அவன் நாட்டில் மட்டும் தான் சிறப்பு, கற்றோனுக்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு என்றெல்லாம் மன்னனுக்கு எதிர்க்குரல் கிளப்பி விட்டு சோழனுடைய நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதாகத் தமிழகத்தில் செவி வழிச் செய்திகளும், கதைகளும் உள்ளன. அவ்வாறு மன்னனுக்கு தன் நாடு மட்டும் சொந்தம், கற்றறிந்த புலவனுக்கோ உலகம் முழுதும் சொந்தம் என்னும் குரல் எழுப்பிப் புதிய காலத்தைத் தொடங்கியவன். மன்னராட்சி முறையின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக அப்பரடிகள், இராமானுசர் போன்றவர்கள் குரல் எழுப்பிய காலமும் தொடங்கியது. கம்பன், மன்னனை விட மக்களே உயர்ந்தவர்கள், மக்களே நாட்டின் உயிர் என்று பாடி புதிய நெறி வகுத்தவன்.
பெரும் புலவன் கம்பனைப் பற்றி, பலரும் பலவேறு பெரும் புலவர்களும் எழுதியும் பாடியும் பாராட்டியும் உள்ளனர். கம்பன் புகழ்பாடி, கன்னித்தமிழின் அழியாச் சிறப்பை எடுத்துக் காட்டியுள்ளனர். தெய்வப் புலமைக் கம்ப நாட்டாழ்வார் என்றும் கார் அணி கொடையான் கம்பன் என்றும் கம்பநாடுடைய வள்ளல் என்றும் கவிச்சக்கரவர்த்தி என்றும் கம்பன் பல தனிப் பெரும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார் என்பதை அறிவோம்.
தமிழ் நாட்டின் பெரும் புலவர்களின் வரலாற்று வரிசையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒளி விட்டுத் தோன்றிய{{{pagenum}}}