32✽கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்
- ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
- ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி, நீ
- தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
- வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்.(கம்பன்-5091)
என்று நினைத்துப் பார்க்கிறாள்.
மனித வாழ்க்கையில் பெறும் பேறுகளில் சிறந்தது நட்பு. ‘செயற்கரிய யாவுள நட்பினது போல்’ என்று வள்ளுவம் கூறும். நட்பு, பழக்கத்தாலேயே வளரும்; பழக்கத்தாலேயே நிலைபெறும். ஆனால், குகன் போன்ற உத்தமர்களுக்கு நன்மை அடிப்படையில் நட்புத் தோன்றுகிறது. எல்லாம் வல்ல கடவுளே, நம்பியாரூரருடன் தோழமையுறவு கொண்டதை ஓர்க. நட்பில்லா வாழ்க்கை சுவையற்றதாகவும் இறுதிக் காலத்தில் பயனற்றதாகவும் போய்விடும். காட்டிற்கு வந்த இராமன் தோழமைத் தம்பியர் உறவுகளைத் திசைதோறும் வளர்த்துக் கொண்டு வலிமை பெற்றான்; அமைதி பெற்றான்; ஆறுதல் பெற்றான். குகனுக்கும் இராமனுக்கும் இடையில் வளர்ந்த நட்பு வழிப்பட்ட அன்பு இருதய சுத்தமானது; அர்ப்பணிப்புத் தன்மையுடையது. அவர்களுடைய நட்பு எல்லையற்றது—இன்றும் நட்புக்கு எடுத்துக்காட்டு குகன்தான்- இன்றுவரை வேறோர் உதாரணம்— சான்று கிடைக்கவில்லை.
கிட்கிந்தை அரசு
அடுத்து, இராமன் அடைந்த நாடு கிட்கிந்தை. இஃது ஒரு அரசு, வானர அரசு. வானர அரசு என்றாலும் ஒரு அரசுக்குரிய அமைப்பு, மந்திரி சபை முதலியன அமைந்திருந்ததாகக் கம்பன் கூறுகின்றான். சுக்கிரீவன் இரண்டு தடவை மந்திரி சபையைக் கூட்டி ஆலோசனை