மூரிய தேர்வலான் 53 என்று அவன் கூறியதில் ஈற்றடியைக் கவனிக்க வேண்டும். அறத்தைக் காட்டிலும் கொடியது ஒன்றும் இல்லையாம். தசரதன் முடிதுறந்து காடு சென்று தவஞ் செய்யப் போகிறேன் என்றால் அது மனிதனுக்குரிய கடமைகளுள் ஒன்றாகும். எனவே, அவ்வாறு செய்ய வேண்டா என்று தடுப்பது அவனை அறஞ் செய்யவேண்டா என்று தடுப்பது போலாகும். அரசனை அறவழியில் செலுத்த வேண்டிய கடப்பாடு உடைய அமைச்சன், தானே அறவழியில் செல்லத் துணிந்த அரசனைத் தடைசெய்யலாமா? அமைச்சன் என்ற முறையில், தசரதன் செய்யத் துணிந்ததை முறைதான் என்று பாராட்ட விரும்பினான் சுமந்திரன். ஆனால், சுமந்திரன் என்ற மனிதன், தசரதனுடைய நண்பன். அவனுடைய பிரிவை நினைத்துக் கலங்குகிறான். அறத்தின்மேல் சுமந்திரன் கொண்ட பற்றே அவனுக்குத் தீங்கை விளைவிக்கிறது. எனவே, அவன் அறத்தின்மேல் பழியைச் சுமத்துகிறான். என்றாலும் இப்பாடல் மூலம் சுமந்திரன் தன் முடிவை விளக்கமாக வெளியிடவில்லை. எனவே, அடுத்த பாடலில் தெளிவாக்குகிறான். "அரசே! யானைப் படையை உடைய மன்னர்களும் ஏனையோர்களும் மந்திரக்கிழவர்களும் முனிவர்களும் உள்ளம் மகிழும்படியாக நின் முதற் புதல்வனுக்கு முடிசூட்டிவிட்டுப் பிறகு மேற்கொள்ளத் தக்க செயல்களைக் கவனிக்கலாம்" என்ற கருத்துப்பட, "புரைசை மால்கரி நிருபர்க்கும் புரத்து(உ)றை வோர்க்கும் உரைசெய் மந்திரக் கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் முரைசம் ஆர்ப்பநின் முதல்மணிப் புதல்வனை முறையால் அரைசன் ஆக்கிப்பின் அப்புறத்து அடுத்தது புரிவாய்" - (மந்திரப் படலம், 47) என்று கூறுகிறான். இந்தப் பாடலின் இறுதி அடியும் சுமந்திரன் மன நிலையை நமக்கு விளக்குகிறது. தசரதன்