பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82



“நீ அவனது நிலை கண்டாய்; இரக்கம் கொண்டாய், அந்த சம்பராசுரன் மீது போர் தொடுத்தாய், போரிலே வெற்றி கண்டாய். அந்த அசுரனைப் பூண்டோடு அழித்தாய். அமராவதியை உனதாக்கிக் கொண்டாய். அதனைப் பின் இந்திரனுக்கு அளித்தாய்.

இவ்வாறு அன்று நீ அளித்த அரசு அன்றோ இன்று இந்திரன் ஆள்கின்ற அரசு.” என்று கூறினார் விசுவாமித்திர முனிவர்.

𝑥𝑥𝑥𝑥

புரந்தரன்—இந்திரன்; இன்தளிர் கற்பகம்—இனிய தளிர்களை உடைய கற்பக மரங்களின்; நறுந்தேன்–மணமுள்ள தேன்; இடை துளிக்கும் நிழல்—இடை இடையே,துளிக்கின்ற குளிர் நிழலிலே; இருக்கை இழந்து—அரசு வீற்றிருந்ததை இழந்து; போந்து-உன்னிடம் வந்து; நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி—என்றும் நிலையாய் நின்று உலகத்தைப் பாதுகாக்கும் ஒப்பற்ற உனது வெண் கொற்றக்குடையின் நிழலில் ஒதுங்கி; குறை இரந்து நிற்ப—தன் குறையைக் கூறி வேண்டி நிற்க; (நீ) நோக்கி—அவனது நிலை கண்டு இரங்கி; குன்று அளிக்கும்—குன்றுகள் என்று கூறத்தக்க; குலமணி தோள்—சிறந்த இரத்தின ஆபரணங்கள் அணிந்த தோள்களை உடைய; சம்பரனை—சம்பராசுரனை; குலத்தோடும் தொலைத்து—குலத்தோடும் அழித்து; கொண்டு-இந்திரன் இழந்த அந்த அரசினை உனதாக்கிக் கொண்டு; அன்று அளித்த அரசு அன்றோ—பிறகு அன்று நீ கொடுத்த அரசு அன்றோ; இன்று ஆள்கின்ற அரசு—இன்று இந்திரன் ஆளும் அரசு; என்றான்—என்று கூறினான்.

𝑥𝑥𝑥𝑥