பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91



அவ்வாறே திருமகள் போன்ற அழகும், ஆயிரம் யானை பலமும் கொண்ட மகள் ஒருத்தி பிறந்தாள். அவளை மிக அருமையாக வளர்த்து வந்தான் சுகேது. தாடகை என்று பெயரிட்டான். அப் பெண்ணுக்கு மணப்பருவம் வந்தது. யக்ஷர் தலைவனாகிய சுந்தன் என்பவனுக்கு அவளை மணம் செய்து கொடுத்தான்.

சுந்தன் என்பவன் ஜர்ஜன் எனும் யக்ஷனின் மகன்.

சுந்தனும் தாடகையும் ரதியும் மன்மதனும் போல வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்குப் புதல்வர் இருவர் பிறந்தனர்.

அப்புதல்வர்களுக்கு மாரீசன், சுபாகு என்று பெயரிட்டனர். இவ்விருவரும் வலிமையும், மாயமும் பெற்று வளர்ந்தனர்.

அளவு கடந்த மதமும் மகிழ்ச்சியும் கொண்டு திரிந்தான் சுந்தன்; அகத்திய முனிவரது ஆசிரமம் சென்றான்; அக்கிரமங்கள் பல செய்தான்.

கடல் குடித்த குறு முனிவர் கோபம் கொண்டார். தீப்பொறி பறக்க விழித்தார். அந்தக் கணமே வெந்து நீறானான் சுந்தன்.

அறிந்தாள் தாடகை. கடும் சினம் கொண்டாள். ‘குறு முனியைக் கொன்று ஒழிப்பேன்’ என்றாள். தன் மைந்தரோடு அகத்தியர் ஆசிரமத்தை அடைந்தாள். முனிவர் முனிந்தார். மூவரையும் அரக்கராகுமாறு சபித்தார்.

மாரீசன், சுபாகு ஆகியோர் இருவரும் பாதாள உலகம் சென்றனர். அங்கு அரசு புரிந்து வந்த சுமாலி என்ற அரக்கனுடன் வாழ்ந்தனர்.