பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90



மூவரும் காமனாசிரமத்தை அடைந்தனர். அங்குள்ள முனிவர்கள் விசுவாமித்திரமுனிவரை வரவேற்றார்கள்.

இராமனையும், இலட்சுமணனையும் மற்றைய முனிவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார் விசுவாமித்திரர். உடனே மற்றைய முனிவர்கள் அந்த அரச குமாரர்களை நன்கு உபசரித்தார்கள்.

“காமனாசிரமம் என்பது சிவபெருமான் யோக நிலையில் இருந்து மன்மதனை எரித்த இடம், சார்ந்த நாடு அங்க நாடு எனப்படும்” என்று இராம லஞ்சுமணர்களுக்குச் சொன்னார் விசுவாமித்திர முனிவர்.

மன்மதன் உடல் இல்லாதவன். அனங்கன் எனும் பெயர் கொண்டவன். ந+அங்கன் = அனங்கன். அங்கம்—உடல்.

மூவரும் காமனாசிரமத்தில் ஒரு நாள் தங்கினர்; மறுநாள் காலையில் புறப்பட்டனர்; கொடிய தொரு பாலைவனத்தை அடைந்தனர். பாலைவனத்தின் கொடுமை தெரியாதிருக்கும் பொருட்டு அரச குமாரர்களுக்கு இரு மந்திரங்களை உபதேசித்தார் முனிவர்.

பலை, அதிபலை என்ற அந்த இரு மந்திரங்களின் உதவியால் அப்பாலை நிலம் சோலை போல் குளிர்ந்தது. அதைத் தாண்டிச் சென்றார்கள்; தாடகவனத்தை அடைந்தார்கள். தாடக வனம் என்பது தாடகையின் வரலாற்றை அந்த அரச குமாரர்களுக்குச் சொன்னார் முனிவர்.

சுகேது எனும் யக்ஷன் மகப்பேறு கருதி பிரமனைக் குறித்து தவம் செய்தான். ‘ஒரு மகள் பிறப்பாள்’ என்று அருளினான் பிரமன்.