பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37




ஆனது அனைத்தும்;
        ஆவி தரித்தேன்; அயர்கின்றேன்
போனது பொற்பும்
        மேன்மையும் அற்றேன் புகழோடும்
யான் அது உனக்கு இன்று
        எங்ஙன் உரைக்கேன் இனி என் ஆ
வானவருக்கும் நாண
        அடுக்கும் வசை அம்மா!

எனக்கு வரவேண்டிய தீமைகள் எல்லாம் வந்துவிட்டன புகழ் போயிற்று; சிறப்பும் போயிற்று; மேன்மையும் இழந்தேன்; வானவருக்கும் நாணத்தக்க சிறுமை வந்து விட்டது. அதை உனக்கு எவ்வாறு கூறுவேன்! எடுத்து இயம்பும் ஆற்றல் இலேன்; உயிரை மட்டும் இழக்காமல் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறேன். வருந்துகிறேன். இனி எனக்கு என்ன பெருமை உளது?

ஆனது அனைத்தும் - எனக்கு வரவேண்டிய தீமைகள் எல்லாம் வந்துவிட்டன; போனது புகழோடும் பொற்பும் - புகழோடு எனது சிறப்பும் போயிற்று;

மேன்மையும் அற்றேன் - மேன்மை இழந்தேன்; அது - அதை; உனக்கு - உனக்கு இன்று எங்ஙனம் உரைக்கேன்? எவ்வாறு சொல்வேன் இன்று; ஆவி தரித்தேன் - உயிரை மட்டும் போகாது பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்: அயர்கின்றேன் - வருந்துகிறேன் : வானவருக்கும் - தேவர்களுக்கும்; நாண - வெட்கமுறும் வண்ணம்; அடுக்கும் வசை- வந்து சம்பவித்துள்ளது நிந்தனை (சிறுமை) இனி என் ஆ - இனி என்ன பெருமை இருக்கிறது?