பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


ஐயா!-ஐயனே! நின்றும் சென்றும் - நகராமல் ஓரிடத்தில் நிலைபெற்றிருந்தும், நடமாடிப் பல இடங்களுக்குச் சென்றும்; வாழ்வன யாவும் - வாழ்கின்ற எல்லா உயிர்களும்; நிலையா - நிலைத்து இருப்பன அல்ல; (ஆதலால்) பொன்றும் என்னும் மெய்ம்மை - உலகில் உள்ள எல்லாம் ஒரு காலத்தில் அழியும் என்ற உண்மையை உணர்ந்தாய் - உணர்ந்திருக்கின்றாய் புலையாள்தற்கு - (அத்தகைய நீ) இவ் இழி தொழில் செய்தற்கு ஒன்றும் உன்னாய் - சிறிதும் நினையாதிருப்பாயாக; என் உரை கொள்ளாய் - என் சொல்லை ஏற்றுக்கொள்வாயாக; இனி உயர் செல்வத்து - இனியும் இப்பொழுது நீ பெற்றுள்ள உயர்ந்த செல்வ நிலையில்; என்றும் என்றும் வைகுதி - என்றென்றும் நீடித்து இருப்பாயாக; என்றான் - என்று இராவணனுக்குச் சொன்னான் மாரீசன்.


“கங்கை சடை வைத்தவனோடும்
        கயிலை வெற்பு ஒர்
அங்கையின் எடுத்த எனது
        ஆடு எழில் மணித்தோள்
இங்கு ஒர் மனிதற்கு
        எளிய என்றனை” எனத் தன்
வெங்கண் எரியப் புருவம் மீது
        உற விடைத்தான்.

“கங்கையைச் சடையிலே தரித்த சிவபெருமான் வீற்றிருக்கின்ற கயிலாய கிரியைப் பெயர்த்து என் உள்ளங்கையிலே வைத்துக்கொண்டவன் நான் அத்தகைய பராக்கிரமம் கொண்ட தோள்கள் என்தோள்கள் கேவலம் ஒரு மனிதனுக்கு எளிய என்று கூறினாய்” என்று கண்களில் தீப்பொறி பறக்கக் கூறினான் இராவணன்.