பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94



வெள்ளமொரு நூறொரு
        இருநூரு மிடை வீரர்
கள்ளவினை வெம் வலி
        அரக்கர் இரு கையும்
முள் எயிறும் வாளும் கூற
        முன்ன முறை நின்றார்
எள்ளரிய காவலினை
        அண்ணலும் எதிர்ந்தான்.

முன்னூறு வெள்ளம் என்று எண்ணிக்கை கொண்ட படைவீரர்கள்-வஞ்சத் தொழிலில் வல்ல கொடியர்கள்-ஆகிய அரக்கர்கள் -ஆயுதங்கள் தாங்கிப் போருக்குச் சித்தமாய் அந்த வாயிலின் இருபுறமும் நிற்கிறார்கள். இத்தகைய காவலினைக் கண்டான் அநுமன்.

***

ஒரு நூறொடு இருநூறு வெள்ளம் மிடை வீரர் - முன்னூறு வெள்ளம் என்ற எண்ணிக்கை கொண்ட நெருங்கிய படை வீரர்களாகிய; கள்ளவினை - வஞ்சத் தொழிலிலும்; வெம்வலி - கொடிய வலிமையும் (கொண்ட) அரக்கர் - அரக்கர்கள்; இருகையும் - வாயிலின் இரண்டு பக்கங்களிலும்; முள் எயிறும் - முள் போன்ற கூரிய பற்களும்; வாளும் - வாட்களும்; உற - கொண்டு; முன்னமுறை நின்றார் - போருக்கு முற்பட்டவர்களாய் முறையில் நின்றார்கள்; எள் அரிய காவலினை - (அத்தகைய) தள்ளுதற்கு அரிய காவலை; அண்ணலும் - பெரியோனான அநுமனும்; எதிர்ந்தான் - முன்னே கண்டான்.

***