10
“நமது துன்பம் நீங்கியது; இன்பம் வந்துவிட்டது. அதற்கு அறிகுறியாக இந்த நம்பியைக் கண்டோம்” என்று இளையவனிடம் கூறினான்.
சுக்கிரீவனை அழைத்து வருவதாகக் கூறி விடைபெற்றுச் சென்றான் அநுமன். சென்றவனும் சுக்கிரீவனை அடைந்தான். இராம லட்சுமணர் யார் என்பதைக் கூறினான். அவர்கள் பால் சுக்கிரீவனை அழைத்துச் சென்றான்.
அநுமனுடன் சென்றான் சுக்கிரீவன். இராமன் லட்சுமணர் ஆகியவர் இருவரையும் நோக்கினான்.
***
நோக்கினான்; நெடிது நின்றான்;
‘நொடிவு அருங் கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம்
அன்று தொட்டு இன்று காறும்
பாக்கியம் புரிந்த எல்லாம்
குவிந்து இரு படிவமாகி
மேக்கு உயர் தடந்தோள் பெற்று
வீரராய் விளைந்த’ என்பான்.
நோக்கினான். யார்? சுக்கிரீவன். யாரை? இராமன், இளையவன் ஆகிய இருவரையும் நோக்கினான்; நோக்கியபடியே நின்றான்; நீண்ட நேரம் நின்றான்; மெய்ம் மறந்தான்; வியந்தான்; வியப்பினில் மூழ்கினான்.
படைத்தல் கடவுளாகிய பிரமதேவன், உலகு தொடங்கிய நாள் முதல் அன்று வரை படைத்த எல்லா உயிர்களும் செய்த புண்ணியம் யாவும் திரண்டு மனித உருக்கொண்டு, இராமன் என்றும் லட்சுமணன் என்றும் பெயர் பூண்டு வந்ததோ என்று வியந்தான்.
***