பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284


தன் ஊனமுற்ற தலையைக் கடலில் தள்ளவேண்டும் என்ற அவன் கோரிக்கையை நிறைவேற்றுகிறான் இராகவன்.


பிராட்டியாரை வசப்படுத்த மாயத்தால் ஒருவனை சனகன் உருக்கொள்ளச் செய்து, அன்னையின் மனத்தைக் கலைக்கப்பார்க்கும் இராவணனை சீதையின் கற்பு தகர்த்தெரிகிறது.

இராவணனின் மகன் அதிகாயனை லட்சுமணன் பிரமாத்திரத்தால் மாய்க்கிறான். இதையறிந்த இராவணன் இந்திரசித்தை நாக பாசத்தால் இளையபெருமாளை பிணிக்குமாறு சொல்கிறான். இந்திரசித்தும் ஆயிரம் ஆண் சிங்கங்கள் பூட்டிய தேரில் செல்கிறான். மாருதி, சாம்பவான் சுக்ரீவன், அங்கதன், நீலன் ஆகியோர் லட்சுமணனுடன் போகின்றனர். இந்திரசித்துக்கும் அநுமனுக்கு கடும்போர் ஏற்படுகிறது. ஆனால் அங்கதன் இந்திரசித்தின் அம்புகளால் தளர்கிறான். இலக்குவன் அநுமன் தோளில் ஏறி பொருகிறான். இந்திரசித்தின் தேரை அழிக்கிறான். மாற்று தேர் மாயமாக வருகிறது. இந்திரசித்துக்கு. அதுவும் அழிக்கப்படுகிறது. இந்திரசித்தின் கவசத்தைப் பிளக்கவே,அவன் ஓடி மறைகிறான்.போகும் முன் இலக்குமணனின் தேரை அழிக்கிறான்.

நாகபாசத்தால் பிணிப்புண்ட லட்சுமணனைப் பார்த்து விபீடணன் வருந்துகிறான். இராமன் துன்பம் தாங்காது தவிக்கிறான். அண்ணல் வெகுண்டெழுந்து உலகத்தினையே அழிக்க நினைக்கிறான். ஆனால் நீதி,ஒருவருக்காக உலகை அழிப்பது நியாயமாகாது என்று நினைவூட்டவே, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறான். தம்பி இறப்பான் ஆகில் தானும் இறக்கப் போவதாக கூறும்போது, விபீடணன், “எவரும் பாசத்தால் உயிர் துறக்கவில்லை என்றும், பாசம் நீங்கினால் உயிர் பெற்றெழுவர்” என்றும் கூறுகிறான்.