பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

297

மற்றவை கரிந்தோடின; எல்லா திசைகளிலும் ஓடி ஓடி அழித்தன.

***

கரும் கோளரிக்கு இளையான் - கரு நிறமுடைய வலிய சிங்கமாகிய இராமனுக்கு இளையவனாகிய லட்சுமணன்; விடுசரம் - விடுத்த அம்புகளில் சில; புரிந்து ஓடின - வளைந்து ஓடின; புகைந்து ஓடின; பொரிந்து ஓடின; புகை நீங்கி எரிந்த வண்ணம் ஓடின; கரிந்து ஓடின; இடம் ஓடின; வலம் திரிந்து ஓடின; நெருங்கி ஓடின; ஒன்று நூறாகி விரிந்து ஓடின; திக்குகளில் சரிந்து ஓடின.

***

கடும்போர் நடந்தது. பற்பல அத்திரங்களை உபயோகித்தனர் இருவரும். கடைசியில் என்ன? யாகம் தடைப்பட்டது. இந்திரசித்து இராவணனை அடைந்தான்.

தந்தையிடம் இராம லட்சுமணனின் ஆற்றலைப் பற்றிப் புகழ்ந்து பேசிய இந்திரசித்து, விபீடணன் அவர்களுக்குத் தங்கள் இரகசியங்களைச் சொல்லி பக்கபலமாக இருப்பதையும் விவரிக்கிறான். எனவே, “சீதையை விட்டிடுவதே செய்யத்தக்கது” என்றும் சொன்னவுடனே, இராவணன் கடுங்கோபம் கொள்கிறான். தானே போருக்கு எழ உத்தேசிக்கும்போது, அவன் மகன் தடுத்து, தானே செல்ல இரதமேறுகிறான். போகுமுன் தானம் முதலியன செய்து, தன் தந்தை இராவணனை நோக்கிக் கண்ணீர் பெருக்கிச் செல்கிறான்.

இலட்சுமணனோடு கடும்போர் நடக்கிறது. சிவபெருமான் தந்த சீலையும் தேரும் இருக்கும்வரை இந்திரசித்தை அழிக்கமுடியாதென்ற பேருண்மையை விபீடணனிடமிருந்து அறிகிறான் லட்சுமணன்.

***