பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


சிங்கங்கள் ஒன்றை மற்றொன்று தாக்குவன போலவும் இடது சாரி வலது சாரியாகத் திரிந்து போர் செய்தனர். குயவன் கையால் சுற்றி விடப்பட்ட சக்கரம் எப்படிச் சுற்றுமோ அப்படி இவ்வுலகில் உள்ள பொருள்கள் யாவும் சுழன்றன. அவ்விருவரும் தோளொடு தோள் தேய்த்தனர்: தாளொடு தாள் தேய்த்தனர். அக்காட்சி எப்படி இருந்தது? சுந்தோப சுந்தர்கள் திலோத்தமையின் பொருட்டுப் போரிட்டது போலிருந்தது.

சுந்தன். உபசுந்தன் என இருவர்; அசுரர் இரண்யகசிபு வழி வந்தவர். நிசும்பன் என்ற அசுரனின் புதல்வர். பிரம தேவனைக் குறித்து அருந்தவம் செய்தனர்; அரிய வரங்கள் பல பெற்றனர். அவ்வலிமையால் தேவர்களை வருத்தினர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிரமதேவன் ஒர் அழகிய பெண்ணைப் படைத்தான்; அவளுக்குத் திலோத்தமை என்று பெயரிட்டான். உயர்ந்த அழகிய பொருள் ஒவ்வொன்றிலும் ஒரு எள் அளவு எடுத்து ஒன்று சேர்த்துப் படைத்ததால் அவள் திலோத்தமை எனும் பெயர் பெற்றாள்.

சுந்தன். உபசுந்தன் ஆகிய இருவரும் அவளை விரும்பினர்.

“உங்கள், இருவரில் எவன் பலசாலியோ அவனையே நான் மணப்பேன்” என்றாள் திலோத்தமை. தங்கள் பலத்தை நிரூபிக்கும் பொருட்டு இருவரும் போரிட்டனர். மடிந்தனர். இது புராண வரலாறு.

இந்த சுந்தோப சுந்தர் போல வாலியும் சுக்கிரீவனும் போரிட்டனர்.


***

நேமி தான் கொலோ? நீலகண்டன்
        நெடும் சூலம்
ஆம் இது ஆம் கொலோ? அன்று எனின்
        குன்று உருவு அயிலும்