34
இல்லறம் துறந்த நம்பி
எம் மனோர்க்கு ஆகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன்
தோன்றலால், வேத நூலில்
சொல் அறம் துறந்திலாத
சூரியன் மரபும், தொல்லை
நல்லறம் துறந்தது என்னா
நகை வர நாண் உட்கொண்டான்.
அரச வாழ்வும், அரண்மனை வாழ்வும் துறந்து, காடு வந்த இராமன், சகோதரர் சண்டையில் தலையிட்டு வில் அறம் துறந்தான். அதனால் வேத விதி வழுவாத சூரிய குல அரசர் மரபும் பழைமையான நல்லறம் துறந்தது என்று எண்ணினான் வாலி; நாணம் மேலிட்டது. மெல்ல நகைத்தான்.
***
இல்லறம் துறந்த நம்பி – இல்லறம் துறந்து, தவ வேடம் தாங்கிக் காடு வந்த புருஷோத்தமன்: எம்மனோர்க்காக – எம்மைப் போன்றவர்களுக்காக; தங்கள் வில் அறம் துறந்த வீரன் – தங்கள் பரம்பரைக்குரிய வில் போர் முறையைக் கைவிட்ட வீரனாகிய இராமன்; தோன்றலால் – பிறந்ததால்; வேத நூலில் சொல் – வேத நூற்களிலே சொல்லப்பட்ட; அறம் துறந்திலாத – அறநெறி வழுவாத; சூரியன் மரபும் – சூரிய குலமும்; தொல்லை நல் அறம் துறந்தது என்ன – தொன்று தொட்டு வருகின்ற நல்ல அறத்தை நழுவவிட்டது என்று; நகை வர–வெளியே சிரிப்பும்; உள் நாணும் – உள்ளே நாணமும்; கொண்டான் – கொண்டான்.
***