42
“ஓவிய உருவ! நாயேன்
உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாந்தி
புந்தி வேறு உற்ற போழ்தில்
தீவினை இயற்று மேனும்
எம்பிமேல் சீறி, என் மேல்
ஏவிய பகழி என்னும்
கூற்றினை ஏவல்’’ என்றான்.
சித்திரம் போலும் வடிவழகு கொண்டவனே! நான் உன் பால் வேண்டும் வரம் ஒன்றுளது. மலரிலேயுள்ள மதுவை அருந்தி மதிமயக்குற்றுத் தவறு இழைத்தாலும் சீறி என்மேல் ஏவிய கணை எனும் கூற்றினை என் தம்பிமேல் ஏவாது பொறுத்திடுவாய்.
***
ஓவிய உருவ - சித்திரம் போலும் வடிவழகு கொண்டவனே; நாயேன் உன் பால் பெறுவது - எளியேன் உன்னிடம் வேண்டிப் பெறுவது; ஒன்று உளது - ஒன்று உண்டு; பூ இயல் - மலர்களில் உண்டான, நறவம் - மதுவை; மாந்தி - அருந்தி; புந்தி - அறிவு; வேறு உற்ற போழ்தில் - மயங்கியபோது, தீவினை இயற்றமேனும் - கெடுதல் செய்தாலும்; சீறி - சினங்கொண்டு; என்மேல் ஏவிய - என் மீது விடுத்த; பகழி எனும் கூற்றினை - அம்பு என்கிற இயமனை எம்பி மேல் -என் தம்பியாகிய சுக்ரீவன் மீது; ஏவல் - ஏவாதிருப்பாயாக;என்றான் - என்று வேண்டினான்.
***
நெய்யடை நெடுவேற்றானை
நீனிற நிருத ரென்னும்
துய்யடைக் கனலியன்ன
தோளினன் தொழிலுந் தூயன்